![]() |
சுதீர் ஶ்ரீகாந்த் ரிஸ்புட் |
Monday, 6 October 2025
கல்லில் செதுக்கியக் கோலங்கள் - ரகு ராமன்
மழை காலத்தில் இடுப்பளவு உயர்ந்து நிற்கும் புற்கள் வெப்பத்தில் காய்ந்து, மடிந்து, ஒன்றோடொன்று பிணைந்து கிடந்தன. இந்த அடர்ந்த தரைவிரிப்பில் திட்டு திட்டாகக் கறைகள் போல ஆங்காங்கே செம்புரைப்பாறைகளின் தளம் தெரிந்தது. மேட்டுபூமியின் சில பகுதிகளில் சப்பாத்திக் கள்ளிச் செடிகளும், பராமரிக்காமல் விடப்பட்ட முந்திரி மரங்களும் குழுமி நின்றன. இந்த பச்சை பழுப்பு கூடாரங்களிலிருந்து கண்ணிற்கு தெரியாத பட்சிகளின் கூவல்கள் வெப்பக் காற்றில் மிதந்து வந்தன. சற்று தொலைவில் நரி ஒன்று எங்களை நோட்டமிட்டு விட்டு கண நேரத்தில் புற்களுள் மறைந்தது. நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் இருந்து சிறிது தூரத்தில் இந்த நிலம் செங்குத்தாக சரிந்து கடலைத் தொடுகிறது. அரபிக்கடலின் அலைகள் பாறைகளில் அறையும் ஓசை, இந்த மேட்டுபூமியின் மூச்சைப் போல, மெலிதாகக் காதில் விழுந்து கொண்டே இருந்தது.
ஒற்றைப் பெரும் கை - அனங்கன்
சிலம்பில் கனவு - ச.வே.சுப்ரமணியன்
கனவு, பண்டைக் காலத்திலிருந்தே மனிதனுக்குப் புரியாத புதிராக இருந்துவந்தது. தத்துவஞானிகளும் ஆய்வாளர்களும், கனவின் தன்மைகளைப் புரிந்து, விளக்க முயற்சித்துள்ளனர். அவர்கள் மனிதனின் அறிவுணர்வு நிலையை மூன்றாகப் பகுத்தனர்: 1.ஜாக்ரத் (நனவு), 2.சொப்பனம் (கனவு), 3.சுஷுப்தி (உறக்கம்) என. கனவு என்பது நனவுக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் இடைநிலையாக அமைந்தது. ரோக்லின் (Rokhlin) என்ற ருஷ்ய அறிஞர், கனவு ஆழ்ந்த உறக்கம் இல்லாத போது மட்டுமே தோன்றுகிறது என்பர்.
தொன்மங்களின் ஆற்றல் - 5: ஜோசப் கேம்ப்பெல்
![]() |
Bison, Grotto of Lascaux |
பகுதி 3 - ஆதி கதைசொல்லிகள்
"தொல்காலத்தை போல மனிதகுலத்திற்கு கற்பிக்கவும் வழிகாட்டவும் விண்ணகசக்தியின் தூதர்களாக எந்த விலங்குகளும் இனி தேவையில்லை. இன்று கரடிகள், சிங்கங்கள், யானைகள், வரையாடுகள், மறிமான்கள் என அனைத்து விலங்குகளும் நமது உயிரியல் பூங்காக்களின் கூண்டுக்குள் வந்துவிட்டன. ஆராயப்படாத சமவெளிகளோ காடுகளோ இப்போதில்லை, அவ்வுலத்தின் புதுவரவாக மனிதனும் இப்போதில்லை, இன்று நமது அண்டைவீட்டானாக இருப்பது காட்டுமிருகங்கள் அல்ல, மாறாக முடிவில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கோளில் இடங்களுக்கும் பொருட்களுக்கும் போராடும் இன்னொரு மனிதன்தான். நமது உடலோ மனதோ பழங்கற்கால வேட்டையினத்தவரின் பல்லாயிர வருட உலகத்தில் இப்போது வசிக்கவில்லை. ஆனால் நம்முடைய உடல் வடிவத்திற்கும் அகக்கட்டமைப்பிற்கும் நாம் அவர்களின் வாழ்க்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் கடன்பட்டிருக்கிறோம். மேலும் அவர்களுடைய விலங்கு தூதர்களின் நினைவுகள் இன்னமும் நம்முள் எவ்விதமோ உறங்கிக்கொண்டிருக்க வேண்டும். ஆகவேதான் காடுகளுக்குள் நாம் நுழைகையில் அவை கண் விழித்துக்கொண்டு நலுங்குகின்றன. இடியின் பேரோசை எழுகையில் அவை பயங்கரத்துடன் கொந்தளிக்கின்றன. எப்போதாவதொரு குகை ஓவியத்தை தரிசிக்க நேர்கையில் அந்நினைவுகள் அடையாளம் பெற்றுவிட்ட உணர்வுடன் மீண்டும் விழித்துக்கொள்கின்றன. அக்குகைகளின் பூசகர்கள் உளமயக்க நிலையில் இருக்கையில் அவர்களுள் இறங்கிய எல்லா உள்ளிருளும் நம்முள்ளும் இருக்கிறது. இரவில் நாம் உறங்கும் போது அது வருகை புரிகிறது"
டுடன்காமுன் கல்லறை 5: பிரிக்கப்பட்ட மம்மி - பொன். மகாலிங்கம்
டுடன்காமுன் மம்மி பெட்டி திறக்கப்பட்ட போது |
டுடன்காமுன் கல்லறை என்னும் திரைப்படத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்தார் கார்ட்டர். பெட்டிகளுக்குள் இருந்த மம்மியை, கிவிப் பழத்தைத் தேக்கரண்டியால் அள்ளுவதுபோல் பூப்போல எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் கார்ட்டர். ஆனால், அது அவ்வளவு எளிதாக அமையவில்லை. கல்பெட்டிக்குள் இருந்த மம்மி வடிவப் பெட்டிக்குள், மேலும் இரண்டு பெட்டிகள் இருந்தன. அவை, மிக மிக நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவே ஒரு சுண்டுவிரலைக்கூட விடமுடியாத அளவுக்கு ஒட்டிக்கொண்டிருந்தன அவை. முதல் பெட்டியைக் காட்டிலும் இரண்டாவது மரப்பெட்டியின் அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது.
இந்தியக் கவிதையியல் - 7: முதன்மைச் சிந்தனைகள், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா
சம்ஸ்கிருதக் கவிதையியல் தொடர்பாக இதுவரை இடம்பெற்றுள்ள அத்யாயங்கள் மிகச் சுருக்கமாக அமைந்திருப்பது மட்டுமல்ல, இவை பலநிலைகளில் முழுமையற்றவாறே விளங்குகின்றன. இருந்தும் இவற்றின் வாயிலாகவே சம்ஸ்கிருதக் கவிதையியலின் பரப்பு ஓரளவேனும் தெரியவரும். வரலாற்று விழிகளில் கவிதையியல் படைப்புகளின் பேராறு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால நெடும்பரப்பில் பற்பல மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. ஓரிடத்தில் குறுகியும் பிறிதொரு இடத்தில் பொங்கிப் பெருக்கெடுத்தும், ஓரிடத்தில் கிளைபிரிந்தும் மற்றொரு இடத்தில் இணைந்தும், இடையில் எங்கும் வற்றிவிடாமல் இந்தப் பேராறு பாய்ந்து வந்திருக்கிறது. ரசகங்காதர ஆசிரியர் ஜகநாத பண்டிதர் தான் கவிதையியல் துறையின் ஆற்றல் மிக்க ஆளுமைகளில் இறுதியானவர். இருந்தும் மிக அண்மைக்காலம் வரையிலும்கூட, மரபிற்கிணங்க நூல்கள் தோன்றவே செய்தன. மைசூர் பரகால மட ஸ்ரீகிருஷ்ண பிரம்ம தந்த்ர பரகால யதீந்திரர் அவர்கள் கி. பி. 1899ம் ஆண்டு நிறைவு செய்திருக்கும் ’அலங்கார மணிஹாரம்’ என்னும் பெருநூலை இங்கு நினைவுகூர வேண்டும்.[1]