Tuesday, 27 May 2025

அரசியல் முரண்பாடுகளின் ஆதாரம் அரசியலில் மட்டும் இல்லை. அதற்கான வேர் சமூகத்திலும் பண்பாடிலும் பிணைந்திருக்கிறது - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்- 2

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

சிந்து, சிலை, சின்னம் - ஸ்டாலின் ராஜாங்கம்

photo courtesy: Sunil Abhiman Awachar

சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு 

1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் குடிசைகளைக் கொளுத்தி விட்டு அங்கிருந்த குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப் பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரை மறைந்திருந்த கும்பல் கடுமையான ஆயுதங்களோடு சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால், கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்று கொண்டிருந்தது. பிறகு வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்த வாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிய குப்புசாமி, போலீசார் வந்தபின்பு துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகளும் கைதுசெய்யப்பட்டனர். 

‘இசைவியல்’ ஒரு யோக சாதகனுக்கு - நித்ய சைதன்ய யதி

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: குரு நித்ய சைதன்ய யதி 'Letters to an Aspiring Yogi' என 15 கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் இரண்டு கடிதங்களின் மொழிபெயர்ப்பு இது. "யோகம்" என்பதை Science of Harmonious Union என்பார் நித்யா. அதையொட்டி, தமிழில் யோகம் என்பதை இசைவியல் என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.

************************

கடிதம் 1

இப் பிரபஞ்சத்தில் மறைமுகமான நன்மை ஒன்றுள்ளது. அது ஒவ்வொரு உயிரையும் பல்லாயிரம் வடிவிலான அருளாக வந்தடைகிறது. அத்தகையதொரு அருளுணர்வை உங்களுள் வளர்த்துக்கொள்வதன் வழியாக, கணம் கணமென அறியப்படுவனவற்றை இங்கு நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறியப்படாத ஒன்றுடன் ஒரு உரையாடலை துவக்க முடியும். இந்த உரையாடல் வளர்ச்சிக்கான, புரிதலுக்கான, உங்கள் நிறைவுணர்வின் பொருளுக்கான பாதை.

எங்கும் திகழும் அந்த மறைமுக நன்மையைப் போலவே, நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவாலான, தடைகளை ஏற்படுத்தும் எதிராற்றல் ஒன்றும் உள்ளது. குழப்பம், ஐயம், சோம்பல், அகக்குலைவு, ஏமாற்றப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உணர்வு, தடைகள், தன்னிரக்கம், பொறுமையின்மை என பல வடிவங்கள் கொள்வது அது. அருளுடன் கொள்ளும் மென்மையான, இடையறாத, நேர்மையான ஒரு உரையாடல் தீமையின் இருளைப் போக்கும் அற்புத ஆற்றல் கொண்டது.

மகிழ்வுடன் இருத்தல் என்பது அனைத்து உயிர்களுக்குமான பிறப்புரிமை. உங்களது அகமெனும் கருவிலிருந்து தோன்றும் மகிழ்ச்சியை நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில்தான் இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மலர்களும், பறவைகளும், வளர்ப்பு மிருகங்களும், குழந்தைகளும் இந்தப் பெருமகிழ்வை யாரும் கேட்காமலேயே பகிர்ந்துகொள்கின்றன. மானுட இயல்பை - நம்முடையதும் பிறருடையதுமான இயல்பை - சிறிது உற்று கவனித்தாலே உங்கள் உலகை விரித்துக்கொள்ளவும், உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பலருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். ஆனால், தன்னொளிர்வு இல்லாத அன்பும், புரிதலற்ற மகிழ்ச்சியும் நம்மை ஏமாற்றும் பொறிகளாக மாறிவிடக் கூடும். அறிதல் மிக அவசியமான ஒன்று.

நீங்கள் விரும்புவது எதனை என்றும் யாரை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். யாரோ ஒருவரை உங்கள்பால் ஈர்க்கும் உங்களின் அருமை என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் காதலிப்பவரிடமும் காதலிக்கப்படுபவரிடமுள்ளது, அகமெனும் ஒற்றை மெய்மையின் ஒன்றையொன்று நிரப்பும் பாதிகளே. உங்கள் நன்மைக்காகவும் பிறர் நன்மைக்காகவும் அதை முழுமையாக அறிய விரும்புங்கள்.

மனதின் பகுத்தறியும்-மதிப்பிடும் புலமும், பருவுலகையும் நனவெனும் களத்தையும் ஆளும் பிரபஞ்ச விதியும் ஒன்றாக இணைவதே யோகம். அத்தகை இசைவு, தெளிந்த பார்வையை அளிக்கிறது. பொருளின் உறுதிப்பாட்டை, செயலின் உறுதியை நிறுவுகிறது. உணர்வுகளை நிலைப்படுத்துகிறது. படிப்படியாக இதை எய்துகையில் பெரும் அக அமைதியை நீங்கள் உணர்கிறீர்கள். எப்போதும் உங்கள் மனதில் வாழ்வின் இயல்பான இனிமை ஒளிர்கிறது. கருணை உணர்வு உங்களைச் சூழ்ந்துள்ள அனைத்திற்கும் பரவுகிறது. 

முதலில் உங்கள் மனம் நோக்கி கவனத்தை குவியுங்கள். அதை கவனியுங்கள். உங்கள் மனம் அலைபாய்கிறது. அனைவருக்கும் நிகழ்வது அதுவே. மனதின் ஒழுக்கும் காலத்தின் ஒழுக்கும் வேறுவேறல்ல. உங்கள் பிறப்பிலிருந்தே தொடங்கிய ஒழுக்கு இது. உங்கள் உடலில் உள்ள உயிர் பிரியும்போது அது நிற்கும். நேரத்திற்கும் மரணத்திற்கும் ‘காலம்’ என்ற பெயரையே பயன்படுத்துகிறோம். நேரம் என்பது இயக்கம் எனும் புலன். உங்களது மன இயக்கத்தை நீங்கள் எப்போதும் உணர்வதில்லை. தூங்கும்போதும், கவனமில்லாமல் இருக்கும்போதும் அது புலப்படாமல் இருக்கிறது. ஒளி பாய்வதை நீங்கள் காண்பதில்லை; ஒரு பொருளை ஒளிரச் செய்கையில்தான் அது தெளிவாகிறது. அதேபோல்தான் மனமும். புறவயமான ஒன்றோ அல்லது அகவயமான ஒன்றோதான் மனதை தன்னைப்பற்றி உணரச் செய்கிறது. பொருட்களும், மனிதரும், அவற்றின்- அவர்களின் இடையேயான செயல்பாடும் உறவும் புறவயமானவை. ‘நான்’ எனும் நனவு, நேரம் பற்றிய உணர்வு, மதிப்பீடு, விருப்பம், உணர்ச்சிகள் என்பவையெல்லாம் அகவயமானவை.

ஒரு குறிப்பிட்ட வெளி அல்லது கருத்தின் மீது நீண்ட நேரம் இடையறாது மையம் கொள்கையில், உணர்வு தீவிரமடைகிறது, தெளிவடைகிறது. உங்கள் மனம் மேலாண்மை செய்யும் ஆற்றல் கொண்டது. உணர்வின் ஒழுக்கை உங்களால் வழிநடத்த முடியும், ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவச்செய்ய முடியும். 

உங்கள் மனம்

  • இயங்கிக்கொண்டே இருக்கிறது
  • அவ்வப்போது தெளிவிழக்கிறது
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுகிறது
  • அதை கட்டுப்படுத்தமுடியும்
  • அது மையம் கொள்கிறது

மனதின் இந்த இயல்புகளை எல்லாம் பொறுமையுடன் கவனியுங்கள். அதனுடன் தோழமை கொள்ள இதுவே சிறந்த வழி.

பயிற்சி

  1. நேரம் கடந்துசெல்வதை, அதைப்போலவே உங்கள் மனமும் ஒழுகிச் செல்வதை கவனியுங்கள். காலத்தின் ஒழுக்கையோ, மனதின் ஒழுக்கையோ திருப்பிச் செலுத்த இயலாது.
  2. தடையின்றி ‘ஓம்’ ‘ஓம்’ என்று சொல்லுங்கள். இடையில் பிற எண்ணங்கள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு எண்ணம் உள் நுழைய முயலும். உங்கள் விழிப்புணர்வு இருளும் ஒரு கணம் வழியாக வருவது அது.
  3. ஒரு பொருள் பற்றி எண்ணுங்கள்; அதைத் தொடர்ந்து தொடர்பற்ற வேறொரு பொருள் பற்றி நினையுங்கள்
  4. உங்களுக்கு மிக அணுக்கமானவரைப் பற்றி சிந்தியுங்கள். அன்பர் மீதான உங்கள் அகப்பார்வை விலகும்போதெல்லாம், இனிய நிகழ்வொன்றை நினைவில் கொணர்ந்து மனதை அவர் மீதே செலுத்துங்கள்
  5. பெருமகிழ்வு கொண்ட உங்கள் அகத்தின் அழகையும் அமைதியையும் உங்களது தோழர் என, மெய்யான காதலரென உங்கள் அருகே அமர அனுமதியுங்கள்.

************************

கடிதம் 2

முந்தைய கடிதத்தை படித்துவிட்டு உங்கள் நனவோடையின் ஒழுக்கை அமைதியாக உற்றுநோக்கியபின் நான் குறிப்பிட்ட ஐந்து பண்புகள் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும்:

  • தொடர் ஒழுக்கு (க்ஷிப்தம்)
  • அவ்வப்போது விழிப்புணர்வு இருண்டுபோதல் (மூடம்)
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் ஆர்வத்தின் தொடர்ச்சியின்மை (விக்ஷிப்தம்)
  • கவனத்தை சிதறடிக்கும் ஆர்வத்தை தடுக்கக் கூடிய உங்களது மேலாண்மை (நிரோதம்)
  • குறிப்பிட்ட நேரத்தில் மனதை நிரப்பும் ஒற்றை ஆர்வத்தில் முழுதாக கரைந்துபோதல் (ஏகாக்ரம்)

இந்த ஐந்து நிலைகளில், இறுதியாக சொல்லப்பட்டதன் பண்புகள் அனைவராலும் போற்றப்படுபவை. வலி, சலிப்பு போலல்லாமல் நீங்கள் இந்த நிலையை தவிர்க்க முயல்வதில்லை. முழுதாக ஈர்க்கப்பட்ட நிலையில் நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணுவதில்லை. இந்நிலையில் ‘நான்’ எனும் நனவுக்கும் ‘நான்’ அல்லாத பிறவற்றுக்கும் இடையில் தெளிவான பிரிவினை இல்லை. அத்தைகையதொரு அனுபவத்தில் காலம் இடம் போன்ற கூறுகள் பற்றிய உணர்வை கடந்து செல்கிறீர்கள். அந்நிலையில் கலக்கமோ கிளர்ச்சியோ இருப்பதில்லை.

இதுவரை படித்துவிட்டு, உங்கள் உடலையும் மனதையும் நிலைநிறுத்தி கண்களை மூடி அத்தகையதொரு நிலையை தீண்ட முடியுமா என்று முயலுங்கள். எதை நோக்கி மெல்ல முன்னேற வேண்டுமோ அந்த இலக்கைப் பற்றிய எண்ணம் உங்களில் தெளிந்துவரக் கூடும். பத்து நிமிடம் வரை அமைதியாக அமர்ந்திருந்த பின் தொடர்ந்து படியுங்கள்.

இப்போது உங்கள் மனம் பரபரப்பின்றி அமைந்திருக்கக் கூடும். நான் சொல்வதும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதும் இப்போது உங்களுக்கு தெளிவாக புரியக்கூடும். நீங்கள் மிக மகிழ்ந்திருந்த தருணங்களை நினைவில் மீட்டெடுக்கக் கூடும். அத்தகைய நிலையே தெளிந்த மெய்மை நிலை. 

ஒரு கண்ணாடி முன் நிற்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் முகத்தில் பளிச் என ஒளி விழுகிறது. அந்தக் கண்ணாடி மாசுமறுவற்றிருக்கிறது. விளைவாக மிகத் தெளிந்த பிரதிபலிப்பு. தெளிந்த நிலையில் நிகழ்வது இதுவே. இந்த ஒப்புமையில் மூன்று பகுதிகள் உள்ளன: ஒளி, முகம் அல்லது பொருள், கண்ணாடி. படிவத்தின் பண்பையும் இதனோடு நான்காவதாக சேர்த்துக்கொள்ளலாம். தெளிந்த நிலையில் ஒளியே தூய நனவின் ஆன்மாவாக இருக்கிறது. அதனை இறை என்றோ அகம் என்றோ, புருஷன் என்றோ மெய்மை என்றோ சொல்லிக்கொள்ளலாம். ஒவ்வொரு பண்பாடும் ஒரு பெயரை அதற்கு அளிக்கிறது. முகம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் அறிதல் புலத்தில் பதிவாகும் ஆர்வம். கண்ணாடி என்பது முக்குணங்களில் ஒன்று. அந்தந்த நிலைக்கேற்ற பெயர் அதற்கு வழங்கப்படும். நாம் தெளிந்த நிலை என்று இங்கே சொல்வதற்கு சத்வ குணம் என்று பெயர்.

புறவய புரிதலுக்கும் அகவய இயல்நிகழ்வுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்ப்பதற்கு பதிலாக, ஒரு ஒளிப்படத்தை திரையில் வீழ்த்துவதை கற்பனை செய்துகொள்ளுங்கள். இதில் ஒளியானது பின்புறமிருந்து வருகிறது. ஒளிரச் செய்யவேண்டிய பொருள் வழியாக ஊடுருவுகிறது. பிம்பத்தைப் பார்ப்பவருக்கு ஒளியின் மூலமோ ஒளிப்படம் வைக்கப்பட்டிருப்பதோ தெரிவதில்லை. விளைவை மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது. அதேபோல், உங்களது புலனறிவுப் புலத்தை ஒளிரச் செய்யும் ஒளியை உங்களால் நேரடியாகக் காண முடியாது. உள்செலுத்தப்படுவது எது என்ற உணர்வோ, உங்கள் அகவயமான கருவியை தன் ஆளுகைக்குள் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் பற்றிய உடனடி உணர்வோ உங்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து வரும் எறிவே உங்கள் நனவுதான். இந்த வீச்சு காலத்தையும் இடத்தையும் சட்டகமாகக் கொண்டது, அவ்வீச்சின் உள்ளார்ந்த பகுதிகளும் அவையே. அதனால் அந்த அனுபவம் நான்கு-பரிமாண மெய்மையாக உங்களுக்கு தோன்றக்கூடும்.

நனவோடை என்பது எப்போதும் ஒழுகிக்கொண்டிருப்பது என்பது அடுத்த புதிர். ஏதோ ஒரு இயக்காற்றல் காரணமாக அதன் வேகம் கூடலாம், குறையலாம், ஓட்டம் நிற்கலாம். ஒவ்வொரு உயிரும் அகமும் உடலும் கொண்ட தனிப்பட்ட பொருள் ஒன்றாக படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அந்த இயக்காற்றல் செயல்படுகிறது. ஒருவரது இயக்குநீர் ஒழுக்கு (hormonal flow), சுரப்பிகளின் ஊற்றம் (glandular secretions), ஏற்பிகளின் கூருணர்ச்சி (irritability of receptors), குளக எதிர்ப்புசக்தி (synaptic resistance), உள்ளார்ந்த வேட்கைகள் (latent urges), முன் நிரல் செய்யப்பட்ட நாட்டங்கள் (preprogrammed pursuits) போன்ற பல கூறுகள் நனவோடையின் ஒழுக்கோடு தொடர்புடையவை. இந்த அக-உடற் கூறுகள் சுழற்காற்றுகளை, கொந்தளிப்புகளை, பேரலைகளை ஏற்படுத்தக்கூடும். மற்றுமொரு நனவுநிலையை இது சுட்டுகிறது - பிரதிபலிப்பில் குறுக்கீடு ஏற்படுகிறது. நீங்கள் கண்டுகொண்டிருந்த தெளிந்த அமைதியான பிம்பத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது இது. இப்போது நீங்கள் உணர்வது தெளிவை அல்ல ஒளியுருவலை (translucency instead of transparency); அமைதிக்கு பதிலாக கொந்தளிப்பை; நிதானத்திற்கு பதிலாக அவசரத்தை. இதிலிருந்து நீங்கள் தப்பவியலாது. ஏனெனில், இது உங்களது இயல்பின் மற்றொரு கூறு - ரஜஸ் எனப்படும் குணம். 

மேற்சொன்ன இரண்டு வகை பிரதிபலிப்புகளும் ஆதல் எனும் தொடர் நிகழ்வின் பகுதிகளே. தவிர்க்க முடியாத மூன்றாவது கூறு ஒன்றுண்டு. ஒரு அனுபவத்தை உறையச்செய்து அதன் நேர்படியாக்கி நினைவில் தங்கச் செய்வது. இங்கு தேவைப்படுவது ஒளியல்ல. அதனை தடுத்து ஒரு பகுதியை இன்னொன்றிலிருந்து பிரிக்கக்கூடியது. இது இயக்கமற்ற நிலை. தெளிவுக்கு பதிலாக மழுப்பலைக் கொணரக்கூடியது. இந்நிலை குறிப்பிட்ட அளவுக்கு நீடிக்குமென்றால் நீங்கள் ஊக்கமிழப்பை, வெறுமையை, பொருளின்மையை, தன்மறுப்பை உணர்வீர்கள். சம்ஸ்க்ருதத்தில் இது தமஸ் எனப்படுகிறது. 

உங்கள் ஆர்வங்களை பிரதிபலிக்கும் இந்த முக்குணங்கள் உங்களில் மாறி மாறி நிகழ்வதை ஏற்கப் பழகுங்கள். அடுத்த கடிதத்தில் இம்முக்குணங்களின் வரிசைமாற்றங்களையும் சேர்க்கைகளையும் (permutations and combinations) விளக்குவேன். 

************************

நித்ய சைதன்ய யதி

தமிழில் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

நித்ய சைதன்ய யதி (1923-1999) நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.


நித்ய சைதன்ய யதி - Tamil Wiki


ஆனந்த் ஶ்ரீநிவாசன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.


ஆனந்த் ஸ்ரீனிவாசன் - Tamil Wiki

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி



சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

கபிலர் - A.G. கிருஷ்ண வாரியர்


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த கட்டுரை இந்திய அரசின் ‘Publication Division’ 1975-ல் வெளியிட்ட ’Founders of Philosophy’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை. கட்டுரையின் தலைப்பு ‘கபிலர்’ என்று இருந்தாலும் இந்த கட்டுரையின் ஆசிரியர் கிருஷ்ண வாரியர் கபிலரின் சாங்கியத்தை மட்டும் இங்கு பேசவில்லை. கபிலரில் துவங்கி சாங்கியத்திற்கு உரை எழுதிய பிற்கால வேதாந்த ஆசிரியர்கள் வரையிலான சாங்கியம், அதன் மறுப்புகள், சாங்கியம் எவ்வாறு வேதாந்த தரப்புக்கு நகர்த்தப்பட்டது ஆகியவை பற்றிய சித்திரங்களை அளிக்கிறார். இக்கட்டுரையில் ‘புருஷன்’ என்ற கருத்தை பல இடங்களில் ’spirit’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இந்த மொழிபெயர்ப்பில் ’புருஷன்’ என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. 


----------------------------------------


“இந்தியாவின் ஒவ்வொரு தத்துவமும், ஒவ்வொரு சிந்தனை முறையும் கபிலருக்கு கடமைப்பட்டுள்ளன. இந்திய தத்துவம் மற்றும் உளவியல் மரபின் வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமை, பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் மகத்தான பெயர் - கபிலர்”. சுவாமி விவேகானந்தரின் இவ்வரிகள் (The Complete Works of Swami Vivekananda, Vol.Ill, p.327) கபிலரின் மேன்மையை கொஞ்சமும் மிகைப்படுத்தவில்லை. சாங்கியதின் ஆய்வாளர் ரிச்சர்ட் கார்பே (Richard Garbe) கூற்றுப்படி, கபிலரின் சாங்கிய தரிசனமே இந்திய தத்துவம் அளித்த பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு (Samkhya Pravachana Bhashya, p. xiv).


சில ஆய்வாளர்கள் கபிலரின் காலம் பற்றிய ஆதாரம் மீது கேள்வியெழுப்பியது உண்மையே. இருந்தாலும், இந்த கேள்விக்கான ஆதாரங்கள் மற்றும் இதற்கு எதிராக கருத்துக்கள் ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு நடுநிலையாக பார்த்தால்கூட அவர் புத்தருக்கும், சில உபநிடதங்களுக்கும் முந்தைய காலத்தில் தழைத்தோங்கிய முதன்மை சிந்தனையாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கபிலர், வியாசர், கௌதமர் போன்றோரின் தொன்மையை மாக்ஸ் முல்லர் (The Six Systems of Indian Philosophy, p.308 (The Chowkhambha Sanskrit Studies, Vol.XVI)) நிலைநிறுத்துகிறார். தினமும் அவியளித்து தர்ப்பணம் செய்யப்படும் சடங்குகளில் கபிலர் மற்றும் அவரது முதன்மை சீடர்கள் சிலரின் பெயர்கள் இடம்பெறுவது (P. V. Kane, History of Dharmasastra, Vol. V, Part II, f. n. 2247), அவர்கள் புராண பாத்திரங்கள் அல்ல, வரலாற்று ஆளுமைகள் என்ற உண்மையை காட்டுகிறது. இதை வலுப்படுத்தும் வரிகள் ‘ஸ்வேதாஸ்வதாரா’ உபநிடத்தில் (V.2) இடம் பெறுகின்றன. இது கபிலரை பற்றிய வரிகள்:


ர்ஸிம் ப்ரசுதம் கபிலம் யஸ்தமாக்ரே 

ஞானாயிர்பிபர்தி ஜயமன்ம்ஹ் க பஸ்யேத் 


அத்வைத தத்துவவாதியான சங்கரரும் இதை தன்னுடைய நூல்களில் உறுதிபடுத்துகிறார். ஆய்வாளர்களின் கருத்துப்படி, சாங்கியத்துடைய பார்வையை எதிர்த்தாலும் சாங்கியத்தை பிரபலப்படுத்தியவர் சங்கரரே (பிரம்மசூத்திர சங்கரபாஸ்யம், 2.1.1). பகவத்கீதை (10.26) கபிலரை நான்முனிகளில் முதன்மையானவராக புகழ்கிறது. ‘சித்தனம் கபிலோ ர். உனிஹ்’. இந்த வரி மரபார்ந்த சாங்கிய யோக தரிசனத்தில் உள்ள ஆதிவித்வான் (யோகபாஸ்யம், of Vyasa; 1.25) - ஆதி முனி, பரமார்ஷி (சாங்கியகாரிகை, 69) - ஒப்பற்ற முனி போன்ற சொற்களுக்கான விவரணைகளுடன் ஒத்துள்ளன.


பவதாயன தர்ம சூத்திரத்தில் (2.11.30) உள்ள குறிப்புகள் கபிலரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதன்படி, கபிலர் அசுரகுலத்தவர், பிரகலாதனின் மகன். தகுதிவாய்ந்தவர்கள் துறவை தேர்ந்து ஏற்பதற்காக துறவு வாழ்விற்கான நெறியை அமைத்தவர். கபிலர், ஆசுரி என்ற பிராமணனை திரும்பத்திரும்ப சந்தித்து இல்லறம் துறந்து, துறவை ஏற்க தூண்டினார் என சொல்லப்படுகிறது (Comment on verse I. Suvarnasaptati sastra, Ed. by N. Aiyasami Sastri, Tirupati, 1944). இவற்றை தொகுத்து பார்த்தால், பண்டைய காலத்தில், புத்தரின் பிறப்புக்கும் முன்பு, பெரும் தத்துவ ஞானியான முனி கபிலர், எளிமைக்கும் துறவுக்கும் பெயர்பெற்றவராக இருந்தார். சித்தார்த்தன் புத்தராகும் முன்பு ஆலரர் என்பவரிடம் சாங்கிய தத்துவத்தை கற்றுக்கொண்டார் (Vide Buddhacarita, canto 12).


பாகவதம் போன்ற புராணங்கள் (Skandha 111, 21.25) கபிலரை ஏறத்தாழ விஷ்ணுவின் அவதாரமாக முன்வைக்கின்றன. கார்த்தம பிரஜாதிபதிக்கும் தேவஹதிக்கும் பிறந்தவர். பிற்காலத்தில் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என சொல்லியது போல, இத்தகைய புராண கதைகளில் அவைதிக பள்ளியின் ஆசிரியரை வைதிகத்திற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை காணலாம். கபிலரை பற்றிய அனைத்து தொல் குறிப்புகளிலும் ஒரு விஷயம் தனித்து தெரிகிறது: கபிலர் அசாதரண பேரறிஞர் மட்டுமல்ல, எல்லையில்லா கருணையாளர். ‘சுவர்ண சப்ததி’ செய்யுள் (Comment on verse I. Suvarnasaptati sastra, Ed. by N. Aiyasami Sastri, Tirupati, 1944) குறிப்பில் இருந்து கபிலர் பிறவியிலேயே ஞானமும் அறிவமைதியும் திறமையும் வாய்த்தவர் என்பதை அறிகிறோம். உலகம் அறிவின்மை எனும் இருளில் மூழ்கியிருப்பதை கண்டார். பெரும் கருணை அவரை இயக்கியது. ஆசுரி எனும் பிராமணர் வேள்வி மரபில் பிணைந்திருப்பதை கண்டார். அசரீரியாக ஆசுரியை அணுகி ‘ஆசுரி, இல்லற வாழ்வில் மகிழ்வாக உள்ளீரா?’ என கேட்டுவிட்டு சென்றார். ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கபிலர் மறுபடியும் ஆசுரியை அணுகி அதே கேள்வியை எழுப்பினார். ‘குருவே, நான் இப்போதே மகிழ்வுடன் தான் இருக்கிறேன்’ என ஆசுரி பதிலுரைத்தார். அதன்பின் கபிலமுனி அமைதியாக பின்வாங்கினார். மூன்றாம் முறையாக, அதே கேள்வியை முன்வைத்து, ஆசுரியின் மாற்றமில்லா பதிலை பெற்றார். எனினும் இம்முறை கபிலர் வினவினார், ‘நீ சுத்த பிரம்மச்சரியம் பழகத் தயாரா?’. பிராமணர் ‘ஆம்’ என்றார். அதன்படி இல்லறத்தை துறந்து, கபிலரின் முதல் மாணவரானார் ஆசுரி.


கபிலரின் கருணை பண்பை இங்கு அழுத்தி சொல்லியாக வேண்டும். கபிலவஸ்து கிராமத்தில் பிறந்த புத்தருக்கும் அந்த கருணை பண்பே அடையாளம் என்பது அவர் கபிலருடன் நீண்ட தொடர்பில் இருந்தமைக்கான சாட்சியாக நிறுவலாம். கபிலரின் தத்துவத்திற்கு அடிப்படை மற்றும் துவக்கம் என்பது எல்லா உயிர்களையும் சூழ்ந்துள்ள துன்பங்கள் (மூன்று துயரங்கள்) மீதான அவரின் கவனமே. எங்கும் இருக்கும் இந்த துயரத்திற்கு மருந்தாக முழுமையான பிழையற்ற அறிவை அவர் ஆசுரிக்கு கற்பித்தார். இதுவே பின்னர் ‘சாங்கியம்’ என வழங்கப்பட்டது. இந்த இறுதிப்பயனுக்காகவே ஆதி முனி கபிலர் ஆசுரிக்கு தனது தத்துவ முறையை கற்பித்தார் (யோகபாஸ்யம், 1.25). 


கபிலர் வாய்மொழியாக மட்டும் கற்பித்தாரா அல்லது நூல்களும் எழுதினாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. விக்ஞானபிக்ஷு விளக்கம் எழுதிய ‘சாங்கிய சூத்திரங்கள்’ நூலை கபிலரின் பெயரில் சுமத்த இயலாது. ஏனெனில் அது எட்டாம் நூற்றாண்டில் சங்கருக்கும், பதினான்காம் நூற்றாண்டில் மத்வருக்கும் அறியப்படாதது. அவர்கள் 2-ம் நூற்றாண்டில் ஈஸ்வரகிருஷ்ணர் இயற்றிய ‘சாங்கிய காரிகை’ நூலை மட்டுமே சுட்டுகிறார்கள். அதே காரணத்தினால் தத்வசமஸ் மற்றும் சஸ்திதந்திரம் போன்ற நூல்களும் கபிலருடையதாக கருதப்படவில்லை. சாங்கிய காரிகையின் 70-வது செய்யுள் பல ஆய்வாளர்களை பின்வரும் கருதுகோளை நோக்கி செலுத்தியது - ’கபிலரின் சொந்த போதனைகளில் இறைமறுப்பு வாதம் இல்லை’ என. ஆனால் இதற்கு மாறாக சாங்கிய காரிகையில் இருக்கும் பழைய சாங்கியம் இறைமறுப்பு வாதத்தை முன்வைப்பதே. இந்த மாற்றம் பஞ்சசிகா-வின் (சாங்கிய ஆசிரியர்களில் ஒருவர், ஈஸ்வரகிருஸ்ஷ்ணருக்கு முற்பட்டவர்) சீர்திருத்தத்தினால் என ஊகிக்கப்படுகிறது, எனினும் இந்த ஊகத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.


இப்போது, கபிலரின் தத்துவங்களின் முக்கிய கொள்கைகளை சுருக்கமாக பார்க்கலாம். தன்னை எல்லா பக்கமும் சூழ்ந்திருக்கும் முரண்களும் வகைமைகளுமே உண்மை என ஏற்கும் சாமானியனின் உலகப்பார்வைக்கு முற்றிலும் வேறாக, ’பருப்பொருட்களின் உலகமானது உண்மையில் அடிப்படையான ஒருமையால் ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்நிகழ்வுகள் மற்றும் வேறுபாடுகளின் ஒற்றைக்காட்சி’ என கபிலர் கற்பிக்கிறார். பருப்பொருள் உலகின் அந்த அடிப்படை ‘பிரகிருதி’. அது மனிதன் எதிர்கொள்ளும் வண்ணமயமான, வளமான, ஏராளமான பண்புகளை உடைய இயற்கை அல்ல. முழுமைபெறாத, காணப்பெறாத, ஒருவித ஆதிபொருண்மை (Urstoff), அவியக்தம். இந்த அடிப்படையான பருப்பொருள் பிரக்ஞை அற்றது. அது மூன்று குணங்களின் கூட்டு. அவை மூன்றும் பண்புகள் அல்ல, சாரப்பொருட்கள்: சத்வம், ரஜஸ், தமஸ். இவை முறையே இன்பம், துன்பம், மயக்கம் என; ஒளிர்வு, செயல், கட்டுபடுத்தும் ஆற்றல் என; எழுச்சி, இயக்கம், நிலை சக்தி என இந்த உலகிலும் அதற்கு வெளியேயும் எண்ணற்று தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன (சாங்கியகாரிகை, 12, 13). அவை இவ்வுலகின் புற மற்றும் அக அம்சங்கள் இரண்டிலும் உள்ளன. புற-அக அம்சங்கள் இரண்டுமே பிரகிருதி என்ற ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இங்கிருந்து ’தத்துவம்’ என்பது இருத்தல்நிலை அல்லது அறிதல்நிலை என்று பொருளில் பயன்படுத்தப்படுகிறது, Philosophy என்ற பொருளில் அல்ல). செயலற்றநிலை மற்றும் செயல்நிலை எனும் இருவேறு நிலைகளை பிரகிருதி கொண்டுள்ளது. பிரகிருதியின் செயலற்றநிலையில் குணங்கள் ‘சம்ய’ எனும் சமநிலையில் இருக்கும். செயல்நிலையில் குணங்கள் ‘வைசம்ய’ எனும் சமநிலைகுலைவில் இருக்கும், அப்போது குணங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன, இணங்குகின்றன, ஆதிக்கத்திற்காக போராடுகின்றன.


கபிலர் ஏற்றுக்கொண்ட மூன்று பிரமாணங்களில் இரண்டாவது பிரமாணமான அனுமானத்தின் மூலம் ’பிரகிருதி’ என்ற கருத்தை நிறுவுகிறார். பருபொருட்கள் அனைத்தும் கால இட எல்லைகளுக்கு உட்பட்டது. ஆகவே அவை பிறிதொன்றை தனது மூலமாகவும் காரணமாகவும் சுட்டுகின்றன. அனைத்து பருப்பொருட்களும் சில பொதுப்பண்புகளை பகிர்ந்துகொண்டுள்ளன. உதாரணமாக தன்னை இனியவையாக, துயர்தருபவையாக அல்லது மாயையாக வெளிப்படுத்தும் தன்மை. இதுவும் பொதுவான மூலத்தையே சுட்டுகிறது. காரிய-பிரபஞ்சமான இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலும் அதற்கான காரண-ஆற்றலில் இருந்தே வந்துள்ளது. ஏனென்றால் காரியமானது அது வருவதற்கான ஒரு அடிப்படை இருந்ததை சுட்டுகிறது, அதாவது காரண ஆற்றல் மற்றும் அடிப்படை கருப்பொருள். காரணத்தில் இருந்து காரியம் வந்திருப்பது பிரம்மாண்டமானவொரு காரண ஆற்றலையும் மற்றும் இந்த ஆற்றலே இக்காரிய-பிரபஞ்சத்திற்கான காரணம் என்பதையும் காட்டுகிறது. மேலும் அனைத்து பருப்பொருள் வடிவங்களிலும் (வைஸ்வரூப்யம்) தெளிவான ஒருமை ஒன்று தெரிகிறது. பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பகுதியும் பிறவற்றை சாராமல் தனித்திருக்க முடியாது. வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால், சிறிய உயிரற்றவை முதல் பெரிய உயிருள்ள வடிவங்கள் வரை அறுபடாதவொரு தொடர்ச்சி உள்ளது. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் பொதுமூலம் என்று ’பிரகிருதி’யை கபிலர் வடிவமைக்கிறார்.


மேற்கண்ட வாதங்கள் ‘சத்காரியவாதம்’ (சாங்கியகாரிகை, 9) என அழைக்கப்படுகிறது - ‘காரியம் அதன் பருப்பொருள் காரணத்தில் முன்னுறைந்துள்ளது’. காரியம் அதன் பருப்பொருள்-காரணத்தில் இருந்து உருவாவதற்கு ’பரிணாமம்’ என்று பெயர். ஆகவே கபிலர் பிரபஞ்சம் இன்மையிலிருந்து வந்தது என்ற கருத்தை மறுக்கிறார். இன்மையிலிருந்து எதுவும் வராது. நமது காரிய-உலகம் அது உருவாவதற்கு முன் அதன் பருப்பொருள் காரணத்தில் பிரகிருதியில் இருந்தது.


இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன், எவ்வாறு பிரக்ஞை இல்லாத பிரகிருதி இந்த ஒழுங்கான காரிய-உலகமாக பரிணமித்து, அறிவார்ந்த மனித உயிர்களின் வாழ்வை செழுமையாக வளர்த்து பேண இயல்கிறது? கபிலரின் தரப்பில் இருந்து இதற்கான பதில் என்பது - பிரபஞ்சத்தின் பிரக்ஞை நிலை ’புருஷன்’. இது பருவுலகை உணர்கிறது. இந்த புருஷ தத்துவத்தை ஏற்றே ஆகவேண்டும், ஏனெனில் பருப்பொருட்களின் கூட்டால் அமைக்கப்பட்ட எந்தவொன்றும், உதாரணத்திற்கு வீடு, ஒரு அறிவார்ந்த உயிரின் உபயோகத்திற்கு வடிவமைக்கப்பட்டதே. இதுபோல ஒழுங்குடன் அமைந்த பருப்பொருட்களின் உலகமும் அதன் மறுபக்கத்தில் பிரக்ஞை அல்லது பிரக்ஞைகள் இருப்பதை அனுமானிக்க வைக்கிறது. பிரக்ஞை இருப்பவற்றிற்கே இன்பம் துன்பம் எனும் அனுபவங்கள் உரியதாகுகிறது. மேலும் பொருள்வய உலகின் இயக்கம் மற்றும் அதன் சிக்கலில் இருந்து எளிமை மற்றும் தனிமையை நோக்கியவொரு நகர்வு உள்ளது, அது எவ்வளவு நுண்மையானது என்றாலும் அது உள்ளது. கபிலரின் தரப்பை பொருத்தவரை, பிரக்ஞை பல - எவ்வளவு உயிர்கள் உள்ளனவோ அவ்வளவு புருஷநிலைகள் உள்ளன. இவ்வாதத்திற்கு சான்றாக, எந்த இரு மனிதனின் அனுபவங்களும் ஒரே மாதிரி இல்லை எனும் உண்மையை முன்வைக்கின்றனர். பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம் யாவும் யாவருக்கும் ஒரே சமயத்தில் நிகழுவதில்லை. பிரகிருதி ஒவ்வொரு பிரக்ஞைக்கும் செயல்படுகிறது. எப்படி பிரக்ஞை இல்லாத தத்துவமான பிரகிருதி அதற்கு நேரெதிரான பிரக்ஞையுள்ள புருஷனுக்காக செயல்படுகிறது? இதற்கு கபிலரின் தரப்பு ’பருப்பொருளுக்கு நோக்கம் உண்டு’ என்ற கருத்தின் (teleology) அடிப்படையிலான பதிலை முன்வைக்கின்றனர். அதாவது, பிரகிருதி விழியிழந்தது என்றாலும் அது நோக்கமற்றது அல்ல. அது புருஷனின் சம்சார அனுபவங்கள் மற்றும் அறுதி வீடுபேறு ஆகிய இரண்டுக்கும் செயல்படுவது. 


பிரபஞ்சத்தின் பரிணாமம் பிரகிருதியில் இருந்து மகத் உருவாவதில் துவங்குகிறது. மகத் அல்லது புத்தி என்பது உளம்சார்ந்த ஒரு தத்துவம். பிரகிருதியில் இருந்தே புத்தி வந்தது என்பதால் அதுவும் முக்குணங்களை கொண்டது. சத்வ - அறிவு மற்றும் பற்றற்ற அமைதி. ரஜஸ - இச்சை மற்றும் கோபம். தமஸ - நிலைத்தன்மை மற்றும் சோர்வு. ஒவ்வொரு புத்தியிலும் இந்த மூன்றில் ஓன்று ஓங்கியும் மற்ற இரண்டு தாழ்ந்தும் இருக்கும். புத்தியில் இருந்து அகங்காரம் அல்லது தன்னுணர்வு என்ற தத்துவம் உருவாகிறது. இது ஒவ்வொரு உயிருக்குமான தத்துவம். கபிலரின் தரப்பு இவ்வாறான தனி-உயிர்களுக்கான தத்துவத்திற்கு இணையாக பிரஞ்சமளாவிய தத்துவங்களையும் குறிப்பிடுகிறது - தனிஉயிர்-தத்துவம் மற்றும் பிரபஞ்ச-தத்துவம். இரண்டும் இணையாக பரிணாமம் அடைந்தன. உதாரணமாக பிரபஞ்ச மகத், பிரபஞ்ச அகங்காரம் என குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம். 


அகங்காரத்திற்கு மூன்று அம்சங்கள் உள்ளன - வைகாரிக அல்லது சத்வ தன்மை, தைசத அல்லது ரஜஸ தன்மை மற்றும் பூதாதி அல்லது தமஸ. வைகாரிகாவில் இருந்து மனம் அல்லது மனஸ், ஐந்து ஞான இந்திரியங்கள் (அறிபுலன்கள்) மற்றும் ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்) உருவாகின்றன. பூதாதியில் இருந்து ஐந்து தன்மாத்திரைகள் (நுண்ணறிதல்கள்) உருவாகின்றன. தைசத-த்தின் தூண்டுதலால் வைகாரிகாவும் பூதாதியும் செயல்நிலைக்கு செல்கின்றன. ஐந்து தன்மாத்திரைகளான ஓசை, தொடுகை, நிறம் (வடிவம்), சுவை, மணம் முறையே வானம், காற்று, தீ, நீர், நிலம் எனும் பஞ்சபூதங்களாக பரிணாமம் அடைகின்றன. இந்த பரிணாமத்தின் பல்வேறு படிநிலைகளை பேணுவது எதுவென்றால், குறைவடையாத பிரகிருதியில் இருந்து தடையில்லாது வரும் பருப்பொருளாகும், இதை பதஞ்சலி ’பிரகிருதியபுர’ (நிரப்புதல்) என குறிப்பிடுகிறார் (யோகபாஸ்யம், 4.2). ஆகவே புருஷன் மற்றும் இந்த 24 தத்துவங்களை (பிரகிருதி, மகத், அகங்காரம், மனஸ், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து பருப்பொருட்கள்) கொண்டுள்ள ஒரு தனி-உயிர் என்பது ஒரு நுண்ணலகு ஆகும். இந்த நுண்ணலகுகள் அனைத்தையும் ஒத்தது மற்றும் அனைத்திற்கும் பொதுவானது ஒரு பேரலகு ஆகும். எனினும் இங்கு அந்த ஒத்த தன்மைக்கு அதிக அழுத்தம் தரப்படவில்லை. ஏனென்றால் அப்படி தரப்பட்டிருந்தால் ஆன்மீகவாத பார்வை இங்கு தவிர்க்கமுடியாதது என ஆகியிருக்கும். 


புருஷன் ஒவ்வொரு உயிர்களிலும் இருப்பது அது ஒரு பிணைப்பில் உள்ளதை காட்டுகிறது. இந்த பிணைப்பு எதனால்? எவ்வாறு புருஷனும் பருப்பொருளும் இவ்வாறான ஒரு உறவில் உள்ளன? இதற்கு இரண்டு விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஒன்று வாகஸ்பதிமிஸ்ரரின் விளக்கம்: புருஷன் புத்தியின் சத்வ நிலையில் பிரதிபலிப்பதை பிணைப்பு என விளக்குகிறார். நீரலைகள் மேல் நிலவு பிரதிபலிப்பது போல, புத்தியின் ஓய்வற்ற அலைகளில் புருஷன் பிரதிபலிப்பது புருஷனுக்கு ஓர் பங்கேற்பு தன்மையை அளிக்கிறது. இதுவே பிணைப்பின் சாரம். இந்த விளக்கத்தை விக்ஞானபிக்ஷு ஒருதலைபட்சமானது மற்றும் வாழ்வின் உண்மையை விளக்க போதாதது என கருதி, மேலும் ஒரு பிரதிபலிப்பை முன்வைக்கிறார். அது புத்தியின் பிரதிபலிப்பு. இதன் மூலம் மட்டுமே புருஷனின் பிணைப்பு, துயரம், வலி போன்றவற்றை விளக்க இயலும் என்கிறார்.


பிணைப்பினாலேயே மூன்று துயரங்கள் (சாங்கியகாரிகை, 1) வருகின்றன. புருஷனுக்கும் பிரகிருதிக்குமான வேறுபாடு பற்றிய அறிவை அடைவதை தவிர அந்த துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு வேறு தீர்வு இல்லை. எனவே சாங்கியத்தின் ஆசிரியர் பஞ்சசிகா ‘ஏகமேவ தர்ஷனம், சாங்க்யமேவ தர்ஷனம்’ எனும் மேற்கோளை உலகிற்கு அளித்துள்ளார். பிரகிருதி-புருஷன்-அன்யதக்யதி வாயிலாக மட்டுமே, அதாவது பிரகிருதியையும் புருஷனை வேறுபடுத்தும் அறிவின் (சாங்கியகாரிகை, 37, பதஞ்சலி யோகசூத்திரம், 3.49) வாயிலாக மட்டுமே, ஆத்மாவின் ஊர்தியான நுண்-உடல் அல்லது லிங்கம் (சாங்கியகாரிகை, 40, 41) அதன் முதலில்லா வாழ்க்கை அலைகழிப்புகளில் இருந்து விடுபட்டு சுமையற்ற எப்போதைக்குமான விடுதலையை அடைய இயலும். தனது ராஜஸ மற்றும் தசஸ விசைகளால் புருஷனை பிணைத்திருக்கும் பிரகிருதியே தனது சத்வ குணத்தின் தூண்டுதலால் புருஷனை விடுவிக்கிறது (சாங்கியகாரிகை 63) என்பது ஆச்சரியமே. கபிலரின் தரப்பின் படி வீடுபேறு என்பது வாழ்க்கையின் முடிவுக்கு பின்னான நிலையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பிரகிருதியையும் புருஷனையும் வேறுபடுத்தும் நிலையில் புத்தி தன்னை நிறுவிக்கொண்டால் வாழும் உடலில் இருந்தே புருஷனின் விடுதலை சாத்தியம். இந்த அறிவு வளர்த்து நிலைபெறச் செய்யப்படுவது. இறுதியில் புருஷன் செயல், பண்புகள் மற்றும் செயல்படுத்தும் ஆற்றல் யாவும் கடந்த தூய புருஷநிலை (நஸ்மி, நமே, நஹம் - சாங்கியகாரிகை 64) அடைகிறது. பானை உருவான பின்னும் சுழலும் குயவனின் சக்கரம் போல, கடந்த கால செயல்களின் விசையால் ஜீவன்முக்தர் அதாவது வீடுபேறடைந்தவர் மேலும் சிறிது காலம் வாழ்ந்திருக்க இயலும். அந்த விசை தீரும் போது பருப்பொருட்களின் கூட்டான உடல் அதன் மூலமான பிரகிருதியில் கரைந்துவிடும். புருஷன் அதன் சுதந்திரமான, தனிமையான நித்திய நிலையில் தங்கியிருக்கும். இவ்வாறு விடுபட்ட புருஷனால் பிரகிருதியும் செயலற்று இருக்கும்.


தொல்சிந்தனைமுறை ஒன்றின் சுருக்கவடிவத்தையும் ஒரு கோட்டுச்சித்திரத்தையுமே மேலே பார்த்தோம். அது ’சத்காரியவாதம்’ என்ற வாதத்தை அடிப்படையாக கொண்டது. காரணத்தில் இல்லாதது காரியத்தில் இல்லை, காரியத்தில் அது வேறுவடிவில் இருக்கும் என்கிறது சத்காரியவாதம். குணங்கள் பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை. அது பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவலாக அறியப்படும் Dr.ஷெல்டனின்(W.H.Sheldon) புகழ்பெற்ற மனநிலைகளின் மூன்று பகுப்புகளான மூளை சார்ந்த நுண்ணுணர்வு (Cerebrotonic), உடல்வலிமை சார்ந்த செயல் (Somatotonic), சமூகம் சார்ந்த உணர்ச்சி (Viscerotonic) (Aldous Huxley, The Perennial Philosophy, pp. 171) என்பவற்றை முறையே சத்வ, ரஜஸ், தமோ குணங்களுடன் ஒப்பிடலாம். சாங்கியத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால் ஒன்றில் இருந்து எவ்வாறு மற்றொன்று வந்தது என்ற தீர்க்கமுடியாத சிக்கலான கேள்வி இங்கு வெற்றிகரமாக தவிர்க்கப்படுகிறது. இந்த சிக்கலை ஒருமைவாத சிந்தனைமுறைகள் எதிர்கொள்கின்றன. உதாரணத்திற்கு, சங்கரரின் அத்வைதம் எவ்வாறு தூய பிரக்ஞையான பிரம்மத்தில் இருந்து பருப்பொருள் உலகம் வந்தது என்பதை விளக்குவது அதில் இருக்கும் சிக்கலை காண்பிக்கிறது. எனினும் அது பருப்பொருள் உலகை மாயை என விளக்கிவிடுவதால் அந்த சிக்கல் கண்ணுக்குத்தெரியாமல் உள்ளது. 


இதற்கு இணையாகவே பொருள்முதல்வாதத்தின் ஒருமைவாதியான மார்க்ஸ் பருப்பொருளில் இருந்து எவ்வாறு பிரக்ஞை வந்தது என்பதை விளக்கும் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதற்கு நேரெதிராக பல பிரக்ஞைகளுக்கும் பருப்பொருட்களுக்கும் இடையேயான நித்தியமான முரணியக்கத்தை கபிலரின் தரப்பு முன்வைக்கிறது. பருப்பொருளை முழுமையானது என்று முன்வைத்து, பருபொருளுக்கும் பிரக்ஞைக்கும் இடையில் பரிமாற்றம் நிகழும் ஒரு பாலம் இருப்பதை நிறுவ முயல்கிறது. சாங்கியம் முன்வைக்கும் உண்மையானது ’பிரக்ஞை மற்றும் பருப்பொருள் ஆகியவற்றிற்கு இடையே அடிப்படை வேறுபாடு’ உள்ளது என்பது. இந்த உண்மையே விவேகம் எனப்படுகிறது. ஆகவே இந்த பாதையில் வீடுபேறை நோக்கிச்செல்பவர்களுக்கு துறவு முன்னிறுத்தப்படுகிறது (பிரஹதாரண்யக உபநிஷதம், 3.5.1). இன்னொருபக்கம், பருப்பொருள் அடிப்படையில் குறைபட்டதோ அல்லது தீமையானதோ அல்ல என கபிலரின் பருப்பொருள் கொள்கை குறிப்பிடுகிறது. அது ‘சத்வ’ என குறையற்ற மற்றும் நன்மைகளின் சாத்தியத்தையும், ‘தமஸ்’ என குறையுள்ள மற்றும் தீமைகளின் சாத்தியத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது. சாங்கியத்தின் பருப்பொருள் கொள்கை மேலும் முக்கியமான ஒன்றை முன்வைக்கிறது: உலகம் எப்போதும் முழுச்சிதைவு எனும் புள்ளியை அடையாது. விடுதலை அடையாத புருஷனுடன் இணைந்து விரிதல் சுருங்குதல் எனும் முடிவிலா தாளத்தில் செல்கிறது. ஆகவே இது பிரபஞ்ச சுழற்சி அதாவது கல்பம் (விரிதல் சுருங்குதல், மீண்டும் விரிதல் என்ற தொடர் நிகழ்வு) என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளது எனலாம். இது இந்திய சிந்தனை எதுவாக இருந்தாலும் அது வைதீகமாக இருந்தாலும் அவைதீகமாக இருந்தாலும் அனைத்திலும் இந்த கருத்து உள்ளது.


சாங்கிய கருத்தான ’சம்சார வாழ்வில் இறந்த ஆத்மாக்கள் ஒரு வடிவிலிருந்து இன்னொரு சம்சார வடிவிற்கு மாற்றம் அடையும் இயங்குமுறை’யும் எல்லா இந்து நம்பிக்கைகளிலும் பெருவாரியாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் லிங்க-சரீரம் பிரகிருதியின் பதினெட்டு விரிவுகளில் இருந்து (புத்தி, அகங்காரம், மனஸ், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், ஐந்து தன்மாத்திரைகள்) வழியாக பரிணாமம் அடைவதை கற்பிக்கிறது. இந்த லிங்க-சரீரம் புருஷனுடன் அதன் பணியாளராக அதன் பணி முடியும் வரை பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. லிங்க-சரீரம் (நுண்-உடல்) கருப்பையில் இருந்து பிறந்த முழு-உடலில் இருந்து வேறுபட்டது. முழு-உடல் மரணத்தின் போது சிதைகிறது. ஆத்மா இன்னொரு வடிவத்திற்கு மாற்றம் அடையும் போதும் லிங்க-சரீரம் உடன் இருந்து அதற்கு ஊர்தியாக இருக்கும். இது மறுபிறப்பு கருத்திற்கான பொதுவானவொரு விளக்கத்தை அமைக்கிறது.


பருப்பொருள் காரணத்தில் இருந்து காரியம் பரிணாமம் அடைவது பற்றிய இந்த சித்திரம் தர்க்கரீதியானதாக தெரிந்தாலும் இதை நுணுகி ஆராயும் போது சிக்கல்கள் இருப்பது புலப்படுகிறது. முதல் காரணமான பிரகிருதியில் இருந்து எப்படி புத்தி, அகங்காரம் மற்றும் பிற தத்துவங்கள் வந்தன என்பதில் தர்க்கரீதியாகவே தெளிவில்லை. இந்த தத்துவங்கள் தொடர்ச்சியாகவும் இல்லை. உதாரணமாக, ’அத்யாவசிய’ (மனதில் உள்வாங்குதல், தீர்மானித்தல்) என்ற திறனை புத்தி கொண்டிருக்கவில்லை. அத்யாவசிய என்பது அகங்காரம் என அடுத்து வருபவற்றை குறிக்கிறது, அறிந்துகொள்ளக்கூடியவை உட்பட. ஆகவே புத்தி என்பது பிரபஞ்சம் சார்ந்த தத்துவத்தை குறிக்கவேண்டுமே தவிர தனி-உயிர் சார்ந்ததாக அல்ல. இந்த பிரபஞ்ச அளவில் புத்தியானது அறிவார்ந்தது, ஒளிரக்கூடியது, அகங்காரத்தினுள் இருக்கும் நுண்ணிய பகுதி, இது பிரகிருதியின் நிலையாக இருக்கும். இவ்வாறு பிரகிருதி உணரத்துவங்கிய பிறகு அகத்திற்கும் புறத்திற்கும், நான் என்பதற்கும் நீ என்பதற்குமான வேறுபாடு வளரும். ஆகவே பிரகிருதியில் இருந்து தொடங்கும் பரிணாம தொடரானது புலனுறுப்புகள், மனம், தன்னுணர்வு, அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் முறையே உணர்ச்சி முதல் முடிவெடுத்தல் வரையான உளம்சார் பரிணாமத்துடன் முரண்படுகிறது. 


இதற்கு இணையாகவே, புருஷனுக்காகவே பிரகிருதி செயல்படுகிறது (சாங்கியகாரிகை, 60) என்ற கருத்தும் மறுக்கப்படுகிறது. இதற்கு சாங்கியம் கூறும் உவமைகளான பசுவின் பாலில் இருந்து கன்றுக்கு ஊட்டமளிப்பது போன்ற ஒழுக்கு, முடவனும் குருடனும் போல இணைந்து செயல்படுவது ஆகியவையும் தெளிவாகவே போதாமல் ஆகின்றன. உள்ளுணர்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவையே இந்த உவமைகளில் முன்வைக்கப்படுகின்றன என்பது தெளிவாக உள்ளது. பிரகிருதியை செயல்படுவதாக ஆக்கி, அதேசமயம் அதனுடைய செயலின் பலனை சுகிக்கும் திறனை பிரகிருதிக்கு மறுப்பது நியாயமற்றது. இது எள்ளலாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:


கார்த்துமேவ விஜநாதி பிரதானம் வியான்ஜனதிகம்

போக்தும் ந ஸ விஜநாதி கிமயக்தமதஹ பரம்

(தத்வசம்கரஹ, 300)


‘பிரகிருதி அருமையான உணவை சமைப்பதில் கைதேர்ந்தவள்; எனினும்
அதை எங்கணம் உண்ணுவது என அவளுக்கு தெரியாது. என்ன ஒரு அபத்தமான வாதம்’


உண்மை என்னவெனில் கபிலரின் சிந்தனைமுறைமையில் புருஷனை போலவே பிரகிருதியும் ஒரு சாராம்ச நிலையே. அதன் வெளிப்படாத நிலைக்கு அவியக்தம் என்று பெயர். அதுவே எல்லா பொருட்களுக்கும் ‘வடிவில்லா’ அடித்தளம். பிரகிருதியின் முக்குணங்கள் எல்லா உயிரினங்களிலும் இருக்கும் மூன்று நிலைகளை குறிக்கிறது. சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை ஒன்றையொன்று பரஸ்பரம் எதிர்த்தும், அதேசமயம் எல்லா பொருட்களிலும் இருப்பது எதைகாட்டுகிறது என்றால், அவை தங்களைத் தாங்களே கடந்துசெல்ல முயலும் முரண்களின் அமைதியற்ற நிலைகள் என்பதை காட்டுகிறது. பிரகிருதியில் அமைதியும், ஒத்திசைவும் இருக்க இயலாது. இதற்கு எதாவது அர்த்தத்தை கொடுக்க வேண்டும் என்றால் புருஷனை எதாவதொரு வழியில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது, அதாவது பிரகிருதியின் அந்த நிலையை தீர்மானிக்கும் புருஷன். குணங்களின் முரண் எதில் கடக்கப்படுகிறதோ அதுவே உண்மை. பிரகிருதி உண்மை ஆக இருக்க இயலாது, ஏனெனில் அது தானல்லாது இன்னொன்றை சார்ந்த முடிவற்ற இயக்கம். பரார்த்தம் எனப்படும் இந்த சார்புத்தன்மை உண்மையற்றதன் அதாவது மாயையின் அடையாளம். பின்னால் அடையாளம் காணப்பட்ட ‘மாயை’ போன்ற கருத்துக்களுக்கும் பிரகிருதி தேவைக்கு மேல் பதில்களை தரவேண்டி இருந்தது. பிரகிருதியை முழுவதும் பருப்பொருள் மற்றும் இயக்கம் என கருதினால் அங்கு விருப்புறுதிக்கான (will) சுதந்திரம் இருக்காது. சாங்கியம் படி விருப்புறுதியும் பிரகிருதியின் தயாரிப்பே. மனிதனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய தீமைகள், மற்றும் வளர்க்க வேண்டிய நற்கூறுகள் உள்ளன. மனிதனில் ஏதேனும் சில தன்மைகள் சுதந்திரமாக உணரப்படவேண்டும். இவ்வுண்மையை முழுதும் ஏற்றுக்கொள்வதன் மூலம், இதனுடன் சுதந்திரமான ஒருங்கிணைந்ததான பிரகிருதியை இணைத்துரைப்பது கடினம்.


சாங்கியத்தின் மற்றொரு வாதமான எண்ணற்ற ‘புருஷ’-ன்கள் என்பதையும் நிலைநிறுத்துவது கடினம். எந்த மாற்றமும் இல்லாமல் நிலையானதாக இருந்துகொண்டு புருஷன் பன்மையாக இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது அல்ல. பன்மை எதுவோ அது புருஷன் அல்ல, அது ஜீவன். கால மற்றும் இடத்தில் பருப்பொருளின் ஒரு பண்பு ‘எண்ணிக்கை’. இது கால-இடமற்ற புருஷனுக்கு பொருந்தாது. சாங்கியத்தின் வாதமான புருஷன்கள் என்ற பன்மைத்துவம் ஜீவன்களுக்கு மட்டுமே பொருந்தும். 


இதுபோலவே, எந்த பருப்பொருளும் தொடவோ கறைபடுத்தவோ இயலாத தூய புருஷனுக்கு பிணைப்பு, வீடுபேறு போன்றவற்றை சுமத்துவது பொருத்தமற்றது. சாங்கிய உரையாசிரியர்களான கௌதபாதர், விக்ஞான பிக்ஷு போன்றோர் மட்டுமல்ல, சாங்கிய காரிகையின் ஆசிரியரான ஈஸ்வரகிருஷ்ணரும் மாறாத புருஷனின் இந்த கணிக்க இயலா நிலைகளை நிலைநிறுத்தமுடியாது என உணர்ந்தனர்.


தஸ்மத் நா பாத்யதே

த்தா நா மக்யதே

நபில் சம்சரதி கஸ்கிட்

(சாங்கியகாரிகை, 62)


‘எனவே நிச்சயமாக, புருஷன் என்பது தளைப்பட்டதும் இல்லை, விடுதலை பெற்றதும் இல்லை. மேலும் மறுபிறப்பு அடைவதும் இல்லை’


எனவே கபிலரின் அமைப்பில் இருக்கும் உண்மை என்பது ‘பருப்பொருள் மற்றும் உளம்சார் நிலைகள் அனைத்தும் பிரகிருதியை மட்டுமே சார்ந்துள்ளது’ - ‘சம்சரதி, பாத்யதே, மக்யதே கா நனஸ்ரய பிரகிருதி’. இது சாங்கியத்தை அத்வைதத்திற்கு நெருக்கமாக கொண்டுவருகிறது. அத்வைதத்தின் படி, ஆத்மா (மொழிபெயர்ப்பளர் குறிப்பு: இங்கு ஆத்மா என்பது புருஷன் என்பதற்கான இணைசொல்லாக வருகிறது) மட்டுமே மாயையால் உருக்கொண்டு கணமும் மாறும் வாழ்க்கையில் உட்படுகிறது.


உண்மையில், தர்க்கத்தின் இடைவிடாத அழுத்தத்தால் கபிலரின் பிரகிருதியை அத்வைதத்தின் மாயையுடன் பொருத்தும் தவிர்க்க இயலா நடவடிக்கை ஸ்வேதஸ்வதாரா உபநிடதத்தின் காலத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என உத்தேசிக்கலாம் - ‘மாயம் து ப்ரக்ரிதம் வித்யத்’ - பிரகிருதியே மாயை என அறிக (ஸ்வேதஸ்வதாரா உபநிடதம், 4.10).


கபிலரின் தரப்புடைய முறைமையில் இருக்கும் பலவீனம் என்பது அது முதன்மையானவை என முன்வைக்கும் இரண்டு தத்துவங்கள் (பிரகிருதி, புருஷன்) ஆகியவைக்கிடையே இருக்கும் தர்க்கத்தின் படி இணைக்க இயலா பிளவு ஆகும். முழுமுதலான ஒரு இறை அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லாமலிருப்பது புருஷன் மற்றும் பருப்பொருள் ஆகிய இரண்டும் ஒன்றின் எல்லையில் இருந்து மற்றொன்று விலகியே இருக்கும். இவற்றை இணைத்ததன் வழியாக கபிலரின் தரப்பின் இறைமறுப்பு மிக மெல்லியதாகவே உள்ளது என சொல்லலாம். உள்ளுறையும் இறை அல்லது மகேஸ்வரன் என்ற கருத்தை மறுக்க கபிலர் அக்கறை கொள்ளவில்லை. இத்தரப்பின் கருத்துப்படி, எந்த வாதமும் கடவுளின் இருப்பை மறுப்புக்கு இடமின்றி நிறுவ இயலாது. இந்த விஷயத்தில் கபிலரும், ’கான்ட்’டும்(Immanuel Kant) ஒரே மாதிரியாகவே சிந்தித்துள்ளனர்.


விக்ஞானபிஷு தனது சாங்கிய பிரவசன பாஸ்யாத்தில் கபிலரின் இறைமறுப்பு மிக சாதுவானது என்று அடிக்கோடிடுகிறார். இது மகாபாரதம் மற்றும் புராண இலக்கியங்களில் ஏன் சாங்கியம் பொதுவாக பரவியுள்ளது என்பதை விளக்குகிறது.


இருப்பினும், ஒரு ஆழ்ந்த மற்றும் பிழை கொள்ளமுடியாத ஒருமை பருப்பொருளுக்கும் புருஷனுக்கும் இடையே இருப்பதாக கபிலருடைய தரப்பின் சிந்தனை முழுதும் குறிக்கப்பட்டுள்ளது. புருஷ மற்றும் பிரகிருதி இடையே ஒருமை இல்லாமல் உலக அனுபவம் மற்றும் ‘அபவர்கம்’ (துக்கத்திலிருந்து விடுதலை) ஆகியவை சாத்தியமில்லை. பிரகிருதியின் அனைத்து நிலைகளிலும் புருஷனின் தூண்டல் உள்ளது. உண்மையில் பிரகிருதியின் முதல் விளைபொருளான புத்தி புருஷனாக மறுபிறப்புள்ள வாழ்வுகள் முழுவதும் செயல்புரிகிறது. 


மொத்தத்தில், இந்த தொன்மையான தத்துவ (Philosophy) அமைப்பு அற்புதமானது, அறிவார்ந்த சாதனை என்பதை மறுக்க இயலாது. “அரிதாகவே, மனித சிந்தனை தத்துவார்த்தமான சிக்கலை இவ்வளவு தெளிவாக கண்டுணுர்ந்துள்ளது. அரிதாகவே இவ்வளவு தெளிவான திறனாய்வுடன் ஒரு தீர்வு எடுக்கப்பட்டுள்ளது, சாதிக்கப்பட்டுள்ளது” (A. Schweitzer, Indian Thought, p.73).


தமிழில் - சதீஷ் குமார் RM.


சாங்கியம் - Tamil Wiki


கபிலர் (சாங்கிய ஞானி) - Tamil Wiki


ஏ.ஜி. கிருஷ்ண வாரியர்

திருவனந்தபுரம் ‘University College’-ல் சம்ஸ்க்ருத பேராசிரியராக பணியாற்றினார். சங்கரரின் பகவத்கீதா பாஷ்யத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய ‘The concept of mukti in Advaita Vedanta’ மிகமுக்கியமான நூலாக கருதப்படுகிறது.



சதீஷ் குமார் RM.

சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார். இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.

டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள் - பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறைச் சுவரைத் துளையிட்டுப் பார்த்த முதல் காட்சியில், பசுவின் தலையைப் போன்ற தோற்றத்தோடு கூடிய, உயரமான ஈமச்சடங்குப் படுக்கையும், ஏராளமான பெட்டிகளும் சின்னச் சின்ன நாற்காலிகளும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்ட பெட்டிகளும் தெரிந்தன கார்ட்டருக்கு. டுடன்காமுன் கல்லறையின் இரண்டாவது நுழைவாயில் தடுப்புச் சுவர் முழுமையாக உடைக்கப்பட்டது 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகம், இந்தத் தேதி நவம்பர் 29 என்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். இரண்டாவது தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே போனதும், கட்டுக்கடங்காத ஆர்வத்தில் எதையும் எடுத்துப் பார்த்து இடம் மாற்றிவிடவில்லை கார்ட்டர். முதலில், கல்லறைக்கு உள்ளே மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொன்றாகப் படம் எடுத்துப் பதிவு செய்தார். 

டுடன்காமுன் சிலையுடன் கட்டுரையாசிரியர்

ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கமிட்டு அந்த எண்ணோடு சேர்த்துப் படங்களைப் பதிவு செய்தார். எந்தப் பொருள், எந்தத் திசையில், என்ன நிலையில் இருந்தது என்பது, கார்ட்டருக்கு மிகவும் முக்கியம். அது, பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். கல்லறையில் இருந்த பெரிய பொருள்கள் அனைத்திலுமே டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். பெரும்பாலான சிறிய பொருள்களிலும்கூட பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தியக் கவிதையியல் - 5: குறிப்பை மறுப்பவர்களும், வேறு பிரிவில் உட்படுத்துபவர்களும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

ஒரு புதிய கவிதைக் கொள்கையை ஆனந்தவர்தனர் த்வன்யாலோகத்தில் அறிவித்த அளவில் எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டு விடவில்லை. மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மறுப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. குணம், அணி தவிர எவை கவிதையை அழகுபடுத்துகின்றன? அழகுபடுத்தும் கவிதைக்கூறுகள் தொடர்பான எல்லாவற்றையும் முன்னோர்கள் கூறிவிடவில்லையா? குணம், அணி இவற்றை விடவும் குறிப்பு வேறுபட்டதாக வாதிட்டாலும் அது மட்டும்தான் கவிதையை அழகுபடுத்துவதாக எப்படி ஏற்றுக்கொள்வது? புதிதாக சில அணிகளை வகுப்பது போன்று ஒருசில அழகுக்கூறுகளை குறிப்புக் கொள்கையாளர்களும் முன்வைத்திருக்கலாம். தாங்கள்தான் இணைமனம் கொண்டவர்கள் என்னும் போலி இறுமாப்பில் பூரித்தவாறு இதற்கே அவர்கள் “த்வனி த்வனி” எனக் கத்தியபடி கண்மூடிக் கூத்தாடலாமா? சில பெயர்களைப் புதிதாகச் சூட்டிவிட அதுவே பெரும்புலமை என்று ஆகிவிடுமா என்ன? இப்படி எல்லாம் கூட சிலர் கூறியிருக்கிறார்கள்.[1]

கல்லில் எழுந்த நாயகர்கள்- தாமரைக்கண்ணன் புதுச்சேரி

தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன்

தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.