Saturday, 5 April 2025

ஆய்வு முடிவுகள் மட்டும் முக்கியமானவை இல்லை, முடிவுகளை வந்தடைவதற்கான முறைகளும் முக்கியமானவை - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

நாத்திகமும் பௌத்தமும்: ஸ்டாலின் ராஜாங்கம்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலக்கட்டத்தில் நாத்திகம் பேசும் அமைப்பொன்று சென்னையில் உருப்பெற்றது. இந்து சுயாக்கியானிகள் சங்கம் (Hindu Free thought Union) என்னும் பெயரில் 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1886ஆம் ஆண்டு முதல் சென்னை லௌகீக சங்கம் (Madras Secular Society) என்று பெயர் மாற்றம் பெற்று செயல்பட்டது. காலனிய தமிழ்ச்சமூகத்தில் அறிமுகமான நவீன சிந்தனை போக்குகளின் தாக்கத்தால் உருவான இந்த அமைப்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே மங்கிப் போனதாகத் தெரிகிறது. இதழ்களை நடத்துவதென்பது அன்றைக்குத் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பிரதான அங்கமாக இருந்த நிலையில் லௌகீக சங்கம் சார்பாக ‘தத்துவவிவேசினி' (1882- 1888) என்ற தமிழ் வார ஏடும் The Thinker என்ற ஆங்கில வார ஏடும் நடத்தப்பட்டன. பிற்கால அரசியலில் பேசப்பட்ட நிலைபெற்ற நவீன அரசியல் கருத்துகள் சில தொடக்கவடிவில் இந்த இதழ்களில் பேசப்பட்டன. நாத்திகம் பிரதான பேசுபொருளாக இருந்து அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய அறிவியல் கருத்துகளை ஆதரித்தல், மூடநம்பிக்கைகளை இனங்காட்டி மறுத்தல், பிராமணர் மற்றும் வேதமரபு எதிர்ப்பு கருத்துகளை விவாதித்தல் போன்றவை இந்த இதழ்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த அமைப்பின் செயற்பாட்டை இவ்விரண்டு இதழ்கள் வழி மட்டுமே அறிய முடிகிறது. இந்த இதழ்களை 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு முறையே வீ. அரசு, வே. ஆனைமுத்து ஆகிய இருவரும் முன்பின்னாகத் தொகுத்து கொணர்ந்துள்ளனர். நவீன தமிழ்ச்சமூகத்தில் பின்னர் நிலைத்த பல்வேறு கருத்துகளின் அறிமுக காலத்தைச் சேர்ந்தவை என்ற வகையில் இத்தொகுப்புகள் முக்கியமானவை. நவீன தமிழ்ச்சமூகத்தின் தொடக்ககாலம் பற்றிய புரிதலுக்கு இவற்றிலிருந்து புதிய தரவுகளைக் கண்டெடுப்பதே இதுபோன்ற தொகுப்புகளுக்கு நாமளிக்கும் மரியாதையாக இருக்க முடியும். அந்த வகையில் இந்த இதழ்களில் வெளிப்பட்ட கருத்துகளின் தொடர்ச்சியையும், பிந்தைய காலத்தில் வேறு கருத்து நிலைகளோடு அவை உசாவியதன் மூலம் அடைந்த மாற்றங்களையும் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். இந்தத் திசையில் இதுவொரு தொடக்கநிலை பதிவாகும். எதிர்காலத்தில் விரியத்தக்கதாகும்.

வேத தொன்மங்கள் - ஆர்தர் அந்தோணி மெக்டோனல்

மதமும் தொன்மமும்

மதம் ஒருபுறம் தெய்வீகத்தை பற்றியும் இயற்கையை மீறிய ஆற்றல்களை பற்றியும் மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இன்னொருபுறம், மனிதன் தன்னுடைய இனத்தின் நலன்கள் அந்த ஆற்றல்களை சார்ந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வை பல்வேறு வழிபாடுகளில் வெளிப்படுத்தியதை உள்ளடக்கியுள்ளது. தொன்மவியல் முதலில் சொல்லியதுடன் தொடர்புடையது. அது கடவுள்கள் மற்றும் நாயகர்கள் பற்றிய தொன்மக்கதைகளை கொண்டது. அவர்களின் குணம், தோற்றுவாய், செயல், சூழல் ஆகியவற்றை விவரிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த தொன்மங்களின் ஊற்றுமுகம் என பண்படாத மற்றும் அறிவியல்-அறிவு அற்ற காலத்தில் மனிதன் தான் எதிர்கொண்ட பல்வேறு விசைகளையும் இயற்கையின் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளையும் விளக்க முற்பட்டதையும் குறிப்பிடலாம். தொன்மங்கள் பண்படாத மனதுடைய கற்பனையை காட்டுகின்றன. ஒரு பண்பட்ட மனதிற்கு உருவகங்களாக தெரியும் கூற்றுகள் அனைத்தும் முந்தைய காலத்திலிருந்து அவதானிக்கப்பட்ட நிகழ்வுகளின் விளக்கங்களாகும். வானில் நிகழும் நிகழ்வுகள் பற்றியும் (உதாரணமாக இடி, மின்னல், புயல் போன்றவை) மற்றும் உலகம் எவ்வாறு தோன்றியது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது போன்ற அறிவார்ந்த கேள்விகளும் எழுந்த போது அதற்கான விடைகள் தொன்மத்தில் கதைகளாக பெறப்பட்டன. தொன்மங்களுக்கான அடிப்படையானது இயற்கையை உயிருள்ள கூறுகளின் தொகுதியாக கருதும் மனிதனின் பண்படாத மனநிலையில் உள்ளது. ஒரு தொன்மம் எப்போது உருவாகிறது என்றால் மனித கற்பனை ஒரு இயற்கை நிகழ்வை ஆளுமையாக உருவகித்து அல்லது மனிதப்பண்பேற்றி விளக்கம் கொடுக்கும்போது உருவாகிறது. உதாரணமாக நிலவு சூரியனை முந்திச்செல்லாமல் தொடர்ந்து செல்வதை அவதானித்த மனிதன் அதை ’ஆண் ஒருவனால் நிராகரிப்பட்டு அவனை தொடர்ந்து செல்லும் பெண்’ என்ற தொன்மமாக ஆக்கியிருக்கலாம். இந்த நேரடியான தொன்மம் அடுத்தநிலையில் கவித்துவமேற்றப்பட்டு படைப்பூக்க கற்பனை கொண்டவர்களால் கையாளப்படத் துவங்குகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கதை கடத்தப்படுகையில் கதைசொல்லியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப அதில் பல்வேறு கூறுகள் சேர்க்கப்படுகின்றன. தொன்மக்கதையில் உள்ள இயற்கை நிகழ்வின் இடத்தை பின்னர் விரிவாக சேர்க்கப்பட்ட மனிதப்பண்பு பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது அந்த நேரடியான இயற்கை நிகழ்வு கதையிலிருந்து மங்கத் தொடங்குகிறது. பிறகு காலம் செல்லச்செல்ல அந்த தொன்மக்கதையின் இயல்பான அடிப்படையான இயற்கை நிகழ்வு மறக்கப்படும்போது அதன் அசலான அர்த்தத்திற்கு தொடர்பே இல்லாத புதிய கூறுகள் அந்த தொன்மத்தில் சேர்க்கப்படலாம் அல்லது வேறு தொன்மங்களிலிருந்தும் கூறுகள் இதற்கு மாற்றப்படலாம். தொன்மத்தை அதனுடைய வளர்ச்சியின் இறுதிப்படிநிலையில் பார்க்கும்போது அதன் அசலான வடிவத்திற்கு தொடர்பற்ற சேர்க்கைகளுடன் இணைந்து அந்த தொன்மம் பெரிதாக வளர்ந்திருக்கலாம். அதை ஆய்வு செய்வது மிகக்கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக மாறியிருக்கலாம். யூரிப்பிடீஸ் நாடகங்களில் உள்ள மனிதப்பண்பேற்றப்பட்ட தெய்வங்களை நமக்கு தெரியும் என்றாலும் கூட, அந்த ஹெலெனிய கடவுள்களின் பண்புகளில் அல்லது செயல்களில் உள்ள அடிப்படையான இயற்கை கூறுகளை கண்டுபிடிப்பது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்.

இந்தியக் கவிதையியல் - 4: குறிப்புக் கொள்கை, தீ.ந.ஶ்ரீ கண்டய்யா


பகுதி I: இலக்கண வளர்ச்சி

அத்யாயம் 4: குறிப்புக் கொள்கை

உடல், ஆன்மா எனக் கவிதையைப் பாகுபடுத்திப் பார்க்கும் பார்வை வாமனர் காலத்திலேயே தோன்றிவிட்டது. நடிப்பையும் பாடலையும் நாடகம் அங்கீகரித்து வந்தது. அதுபோன்று இலக்கியமும் சுவை உருவாகும் இயல்பை பழங்காலம் முதல் அங்கீகரித்தே வந்திருக்கிறது. அரங்கில் நடிப்பதற்காக இயற்றப்பட்ட நாடகங்கள் உயர்ந்த இலக்கியங்களாகவும் இருந்துவந்தன. எனவே, நாடகங்களின் இலக்கியத்தன்மையையும் அணியியலாளர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில், கவிதையியலின் அடிப்படையில் நாடகம், இலக்கியம் இரண்டையும் ஒருங்கிணைந்த நோக்கில் பார்வையிட்டு காட்சிக் கவிதைக்கு மட்டுமல்ல, கேட்புக் கவிதையின் நோக்கமும் சுவை உருவாக்கம்தான், எல்லா வகைக் கவிதைகளின் உண்மையான ஆன்மா சுவைதான் என்னும் புரிதலை முன்வைக்கும் இலக்கணவாதிகளின் வருகை இயல்பான ஒன்றுதான்.[1]

டுடன்காமுன் கல்லறை 2 : அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிசயம்- பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட கார்ட்டருக்கு, முதலில் தோன்றியது மலைப்பு. எங்கிருந்து தோண்டத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார் அவர். குப்பையாகக் கிடக்கும் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினால், எங்கிருந்து தொடங்குவது என்று திணறுவோமே! அதுபோல இருந்தது, கார்ட்டரின் நிலை அன்று. மலைத்துப்போய் நின்றுவிட முடியுமா ? செய்யவேண்டிய வேலை, மலையாய்க் குவிந்து கிடக்கிறதே. ஏற்கெனவே மன்னர்களின் பள்ளத்தாக்கில், தோண்டித் துருவி ஆய்வு நடத்தியவர்கள் அள்ளிக்கொட்டிய குப்பையே, மலைபோல் குவிந்து கிடந்தது.

பிரமிடைப் போன்ற தோற்றமுள்ள குன்றும் மன்னர்களின் பள்ளத்தாக்கும்

தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்


பகுதி 2 - அகவயப்பயணம்

"நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது"

மோயர்ஸ்: என்னிடம் ஒருவர் கேட்டார், "ஏன் இந்த தொன்மங்கள் உங்களை இழுத்துக்கொண்டன? ஜோசப் கேம்ப்பெல் சொல்வதில் இருந்து நீங்கள் எதை அறிந்துகொள்கிறீர்கள்?" என்று. நான் அதற்கு "எது உண்மையென்று நான் என்னுள் அறிந்திருந்தேனோ அதையே தொன்மங்கள் வெளிப்படுத்தி, அதன் மூலமாக அவை என்னுடன் உரையாடுகின்றன" என பதிலளித்தேன். தொன்மங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? நான் உண்மையென்று என்னுள் அறிந்தவற்றையே இக்கதைகளும் சொல்வதாக ஏன் தோன்றுகிறது? எனது இருப்பின் அடிப்படையிலிருந்து அது தோன்றுகிறதா? அதாவது எனக்கு முன்பாக இங்கு தோன்றிய அனைத்திலிருந்தும் மரபார்ந்து நான் பெற்றுக்கொண்ட நனவிலியில் இருந்து அது தோன்றுகிறதா?

அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி


வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்

கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்

அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர்  அன்னைபிதா

இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே

காளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும் தனக்கும் அம்மை ஒருத்தி வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். தன்னை தரிசிக்க கயிலை வந்த காரைக்காலம்மையை 'நம்மைப் பேணும் அம்மை காண் இவள்' என்று ஈசன் உமையிடம் சொல்வதாக  பெரியபுராணம் உரைக்கிறது. உலகின் தந்தை, உலகன்னையிடம் இதோ வரும் இந்த பெண்மணி என் தாய் என்கிறார்.