மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த கட்டுரை இந்திய அரசின் ‘Publication Division’ 1975-ல் வெளியிட்ட ’Founders of Philosophy’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை. கட்டுரையின் தலைப்பு ‘கபிலர்’ என்று இருந்தாலும் இந்த கட்டுரையின் ஆசிரியர் கிருஷ்ண வாரியர் கபிலரின் சாங்கியத்தை மட்டும் இங்கு பேசவில்லை. கபிலரில் துவங்கி சாங்கியத்திற்கு உரை எழுதிய பிற்கால வேதாந்த ஆசிரியர்கள் வரையிலான சாங்கியம், அதன் மறுப்புகள், சாங்கியம் எவ்வாறு வேதாந்த தரப்புக்கு நகர்த்தப்பட்டது ஆகியவை பற்றிய சித்திரங்களை அளிக்கிறார். இக்கட்டுரையில் ‘புருஷன்’ என்ற கருத்தை பல இடங்களில் ’spirit’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இந்த மொழிபெயர்ப்பில் ’புருஷன்’ என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
----------------------------------------
“இந்தியாவின் ஒவ்வொரு தத்துவமும், ஒவ்வொரு சிந்தனை முறையும் கபிலருக்கு கடமைப்பட்டுள்ளன. இந்திய தத்துவம் மற்றும் உளவியல் மரபின் வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமை, பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் மகத்தான பெயர் - கபிலர்”. சுவாமி விவேகானந்தரின் இவ்வரிகள் (The Complete Works of Swami Vivekananda, Vol.Ill, p.327) கபிலரின் மேன்மையை கொஞ்சமும் மிகைப்படுத்தவில்லை. சாங்கியதின் ஆய்வாளர் ரிச்சர்ட் கார்பே (Richard Garbe) கூற்றுப்படி, கபிலரின் சாங்கிய தரிசனமே இந்திய தத்துவம் அளித்த பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு (Samkhya Pravachana Bhashya, p. xiv).
சில ஆய்வாளர்கள் கபிலரின் காலம் பற்றிய ஆதாரம் மீது கேள்வியெழுப்பியது உண்மையே. இருந்தாலும், இந்த கேள்விக்கான ஆதாரங்கள் மற்றும் இதற்கு எதிராக கருத்துக்கள் ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு நடுநிலையாக பார்த்தால்கூட அவர் புத்தருக்கும், சில உபநிடதங்களுக்கும் முந்தைய காலத்தில் தழைத்தோங்கிய முதன்மை சிந்தனையாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கபிலர், வியாசர், கௌதமர் போன்றோரின் தொன்மையை மாக்ஸ் முல்லர் (The Six Systems of Indian Philosophy, p.308 (The Chowkhambha Sanskrit Studies, Vol.XVI)) நிலைநிறுத்துகிறார். தினமும் அவியளித்து தர்ப்பணம் செய்யப்படும் சடங்குகளில் கபிலர் மற்றும் அவரது முதன்மை சீடர்கள் சிலரின் பெயர்கள் இடம்பெறுவது (P. V. Kane, History of Dharmasastra, Vol. V, Part II, f. n. 2247), அவர்கள் புராண பாத்திரங்கள் அல்ல, வரலாற்று ஆளுமைகள் என்ற உண்மையை காட்டுகிறது. இதை வலுப்படுத்தும் வரிகள் ‘ஸ்வேதாஸ்வதாரா’ உபநிடத்தில் (V.2) இடம் பெறுகின்றன. இது கபிலரை பற்றிய வரிகள்:
ர்ஸிம் ப்ரசுதம் கபிலம் யஸ்தமாக்ரே
ஞானாயிர்பிபர்தி ஜயமன்ம்ஹ் க பஸ்யேத்
அத்வைத தத்துவவாதியான சங்கரரும் இதை தன்னுடைய நூல்களில் உறுதிபடுத்துகிறார். ஆய்வாளர்களின் கருத்துப்படி, சாங்கியத்துடைய பார்வையை எதிர்த்தாலும் சாங்கியத்தை பிரபலப்படுத்தியவர் சங்கரரே (பிரம்மசூத்திர சங்கரபாஸ்யம், 2.1.1). பகவத்கீதை (10.26) கபிலரை நான்முனிகளில் முதன்மையானவராக புகழ்கிறது. ‘சித்தனம் கபிலோ ர். உனிஹ்’. இந்த வரி மரபார்ந்த சாங்கிய யோக தரிசனத்தில் உள்ள ஆதிவித்வான் (யோகபாஸ்யம், of Vyasa; 1.25) - ஆதி முனி, பரமார்ஷி (சாங்கியகாரிகை, 69) - ஒப்பற்ற முனி போன்ற சொற்களுக்கான விவரணைகளுடன் ஒத்துள்ளன.
பவதாயன தர்ம சூத்திரத்தில் (2.11.30) உள்ள குறிப்புகள் கபிலரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதன்படி, கபிலர் அசுரகுலத்தவர், பிரகலாதனின் மகன். தகுதிவாய்ந்தவர்கள் துறவை தேர்ந்து ஏற்பதற்காக துறவு வாழ்விற்கான நெறியை அமைத்தவர். கபிலர், ஆசுரி என்ற பிராமணனை திரும்பத்திரும்ப சந்தித்து இல்லறம் துறந்து, துறவை ஏற்க தூண்டினார் என சொல்லப்படுகிறது (Comment on verse I. Suvarnasaptati sastra, Ed. by N. Aiyasami Sastri, Tirupati, 1944). இவற்றை தொகுத்து பார்த்தால், பண்டைய காலத்தில், புத்தரின் பிறப்புக்கும் முன்பு, பெரும் தத்துவ ஞானியான முனி கபிலர், எளிமைக்கும் துறவுக்கும் பெயர்பெற்றவராக இருந்தார். சித்தார்த்தன் புத்தராகும் முன்பு ஆலரர் என்பவரிடம் சாங்கிய தத்துவத்தை கற்றுக்கொண்டார் (Vide Buddhacarita, canto 12).
பாகவதம் போன்ற புராணங்கள் (Skandha 111, 21.25) கபிலரை ஏறத்தாழ விஷ்ணுவின் அவதாரமாக முன்வைக்கின்றன. கார்த்தம பிரஜாதிபதிக்கும் தேவஹதிக்கும் பிறந்தவர். பிற்காலத்தில் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என சொல்லியது போல, இத்தகைய புராண கதைகளில் அவைதிக பள்ளியின் ஆசிரியரை வைதிகத்திற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை காணலாம். கபிலரை பற்றிய அனைத்து தொல் குறிப்புகளிலும் ஒரு விஷயம் தனித்து தெரிகிறது: கபிலர் அசாதரண பேரறிஞர் மட்டுமல்ல, எல்லையில்லா கருணையாளர். ‘சுவர்ண சப்ததி’ செய்யுள் (Comment on verse I. Suvarnasaptati sastra, Ed. by N. Aiyasami Sastri, Tirupati, 1944) குறிப்பில் இருந்து கபிலர் பிறவியிலேயே ஞானமும் அறிவமைதியும் திறமையும் வாய்த்தவர் என்பதை அறிகிறோம். உலகம் அறிவின்மை எனும் இருளில் மூழ்கியிருப்பதை கண்டார். பெரும் கருணை அவரை இயக்கியது. ஆசுரி எனும் பிராமணர் வேள்வி மரபில் பிணைந்திருப்பதை கண்டார். அசரீரியாக ஆசுரியை அணுகி ‘ஆசுரி, இல்லற வாழ்வில் மகிழ்வாக உள்ளீரா?’ என கேட்டுவிட்டு சென்றார். ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கபிலர் மறுபடியும் ஆசுரியை அணுகி அதே கேள்வியை எழுப்பினார். ‘குருவே, நான் இப்போதே மகிழ்வுடன் தான் இருக்கிறேன்’ என ஆசுரி பதிலுரைத்தார். அதன்பின் கபிலமுனி அமைதியாக பின்வாங்கினார். மூன்றாம் முறையாக, அதே கேள்வியை முன்வைத்து, ஆசுரியின் மாற்றமில்லா பதிலை பெற்றார். எனினும் இம்முறை கபிலர் வினவினார், ‘நீ சுத்த பிரம்மச்சரியம் பழகத் தயாரா?’. பிராமணர் ‘ஆம்’ என்றார். அதன்படி இல்லறத்தை துறந்து, கபிலரின் முதல் மாணவரானார் ஆசுரி.
கபிலரின் கருணை பண்பை இங்கு அழுத்தி சொல்லியாக வேண்டும். கபிலவஸ்து கிராமத்தில் பிறந்த புத்தருக்கும் அந்த கருணை பண்பே அடையாளம் என்பது அவர் கபிலருடன் நீண்ட தொடர்பில் இருந்தமைக்கான சாட்சியாக நிறுவலாம். கபிலரின் தத்துவத்திற்கு அடிப்படை மற்றும் துவக்கம் என்பது எல்லா உயிர்களையும் சூழ்ந்துள்ள துன்பங்கள் (மூன்று துயரங்கள்) மீதான அவரின் கவனமே. எங்கும் இருக்கும் இந்த துயரத்திற்கு மருந்தாக முழுமையான பிழையற்ற அறிவை அவர் ஆசுரிக்கு கற்பித்தார். இதுவே பின்னர் ‘சாங்கியம்’ என வழங்கப்பட்டது. இந்த இறுதிப்பயனுக்காகவே ஆதி முனி கபிலர் ஆசுரிக்கு தனது தத்துவ முறையை கற்பித்தார் (யோகபாஸ்யம், 1.25).
கபிலர் வாய்மொழியாக மட்டும் கற்பித்தாரா அல்லது நூல்களும் எழுதினாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. விக்ஞானபிக்ஷு விளக்கம் எழுதிய ‘சாங்கிய சூத்திரங்கள்’ நூலை கபிலரின் பெயரில் சுமத்த இயலாது. ஏனெனில் அது எட்டாம் நூற்றாண்டில் சங்கருக்கும், பதினான்காம் நூற்றாண்டில் மத்வருக்கும் அறியப்படாதது. அவர்கள் 2-ம் நூற்றாண்டில் ஈஸ்வரகிருஷ்ணர் இயற்றிய ‘சாங்கிய காரிகை’ நூலை மட்டுமே சுட்டுகிறார்கள். அதே காரணத்தினால் தத்வசமஸ் மற்றும் சஸ்திதந்திரம் போன்ற நூல்களும் கபிலருடையதாக கருதப்படவில்லை. சாங்கிய காரிகையின் 70-வது செய்யுள் பல ஆய்வாளர்களை பின்வரும் கருதுகோளை நோக்கி செலுத்தியது - ’கபிலரின் சொந்த போதனைகளில் இறைமறுப்பு வாதம் இல்லை’ என. ஆனால் இதற்கு மாறாக சாங்கிய காரிகையில் இருக்கும் பழைய சாங்கியம் இறைமறுப்பு வாதத்தை முன்வைப்பதே. இந்த மாற்றம் பஞ்சசிகா-வின் (சாங்கிய ஆசிரியர்களில் ஒருவர், ஈஸ்வரகிருஸ்ஷ்ணருக்கு முற்பட்டவர்) சீர்திருத்தத்தினால் என ஊகிக்கப்படுகிறது, எனினும் இந்த ஊகத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இப்போது, கபிலரின் தத்துவங்களின் முக்கிய கொள்கைகளை சுருக்கமாக பார்க்கலாம். தன்னை எல்லா பக்கமும் சூழ்ந்திருக்கும் முரண்களும் வகைமைகளுமே உண்மை என ஏற்கும் சாமானியனின் உலகப்பார்வைக்கு முற்றிலும் வேறாக, ’பருப்பொருட்களின் உலகமானது உண்மையில் அடிப்படையான ஒருமையால் ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்நிகழ்வுகள் மற்றும் வேறுபாடுகளின் ஒற்றைக்காட்சி’ என கபிலர் கற்பிக்கிறார். பருப்பொருள் உலகின் அந்த அடிப்படை ‘பிரகிருதி’. அது மனிதன் எதிர்கொள்ளும் வண்ணமயமான, வளமான, ஏராளமான பண்புகளை உடைய இயற்கை அல்ல. முழுமைபெறாத, காணப்பெறாத, ஒருவித ஆதிபொருண்மை (Urstoff), அவியக்தம். இந்த அடிப்படையான பருப்பொருள் பிரக்ஞை அற்றது. அது மூன்று குணங்களின் கூட்டு. அவை மூன்றும் பண்புகள் அல்ல, சாரப்பொருட்கள்: சத்வம், ரஜஸ், தமஸ். இவை முறையே இன்பம், துன்பம், மயக்கம் என; ஒளிர்வு, செயல், கட்டுபடுத்தும் ஆற்றல் என; எழுச்சி, இயக்கம், நிலை சக்தி என இந்த உலகிலும் அதற்கு வெளியேயும் எண்ணற்று தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன (சாங்கியகாரிகை, 12, 13). அவை இவ்வுலகின் புற மற்றும் அக அம்சங்கள் இரண்டிலும் உள்ளன. புற-அக அம்சங்கள் இரண்டுமே பிரகிருதி என்ற ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இங்கிருந்து ’தத்துவம்’ என்பது இருத்தல்நிலை அல்லது அறிதல்நிலை என்று பொருளில் பயன்படுத்தப்படுகிறது, Philosophy என்ற பொருளில் அல்ல). செயலற்றநிலை மற்றும் செயல்நிலை எனும் இருவேறு நிலைகளை பிரகிருதி கொண்டுள்ளது. பிரகிருதியின் செயலற்றநிலையில் குணங்கள் ‘சம்ய’ எனும் சமநிலையில் இருக்கும். செயல்நிலையில் குணங்கள் ‘வைசம்ய’ எனும் சமநிலைகுலைவில் இருக்கும், அப்போது குணங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன, இணங்குகின்றன, ஆதிக்கத்திற்காக போராடுகின்றன.
கபிலர் ஏற்றுக்கொண்ட மூன்று பிரமாணங்களில் இரண்டாவது பிரமாணமான அனுமானத்தின் மூலம் ’பிரகிருதி’ என்ற கருத்தை நிறுவுகிறார். பருபொருட்கள் அனைத்தும் கால இட எல்லைகளுக்கு உட்பட்டது. ஆகவே அவை பிறிதொன்றை தனது மூலமாகவும் காரணமாகவும் சுட்டுகின்றன. அனைத்து பருப்பொருட்களும் சில பொதுப்பண்புகளை பகிர்ந்துகொண்டுள்ளன. உதாரணமாக தன்னை இனியவையாக, துயர்தருபவையாக அல்லது மாயையாக வெளிப்படுத்தும் தன்மை. இதுவும் பொதுவான மூலத்தையே சுட்டுகிறது. காரிய-பிரபஞ்சமான இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலும் அதற்கான காரண-ஆற்றலில் இருந்தே வந்துள்ளது. ஏனென்றால் காரியமானது அது வருவதற்கான ஒரு அடிப்படை இருந்ததை சுட்டுகிறது, அதாவது காரண ஆற்றல் மற்றும் அடிப்படை கருப்பொருள். காரணத்தில் இருந்து காரியம் வந்திருப்பது பிரம்மாண்டமானவொரு காரண ஆற்றலையும் மற்றும் இந்த ஆற்றலே இக்காரிய-பிரபஞ்சத்திற்கான காரணம் என்பதையும் காட்டுகிறது. மேலும் அனைத்து பருப்பொருள் வடிவங்களிலும் (வைஸ்வரூப்யம்) தெளிவான ஒருமை ஒன்று தெரிகிறது. பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பகுதியும் பிறவற்றை சாராமல் தனித்திருக்க முடியாது. வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால், சிறிய உயிரற்றவை முதல் பெரிய உயிருள்ள வடிவங்கள் வரை அறுபடாதவொரு தொடர்ச்சி உள்ளது. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் பொதுமூலம் என்று ’பிரகிருதி’யை கபிலர் வடிவமைக்கிறார்.
மேற்கண்ட வாதங்கள் ‘சத்காரியவாதம்’ (சாங்கியகாரிகை, 9) என அழைக்கப்படுகிறது - ‘காரியம் அதன் பருப்பொருள் காரணத்தில் முன்னுறைந்துள்ளது’. காரியம் அதன் பருப்பொருள்-காரணத்தில் இருந்து உருவாவதற்கு ’பரிணாமம்’ என்று பெயர். ஆகவே கபிலர் பிரபஞ்சம் இன்மையிலிருந்து வந்தது என்ற கருத்தை மறுக்கிறார். இன்மையிலிருந்து எதுவும் வராது. நமது காரிய-உலகம் அது உருவாவதற்கு முன் அதன் பருப்பொருள் காரணத்தில் பிரகிருதியில் இருந்தது.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன், எவ்வாறு பிரக்ஞை இல்லாத பிரகிருதி இந்த ஒழுங்கான காரிய-உலகமாக பரிணமித்து, அறிவார்ந்த மனித உயிர்களின் வாழ்வை செழுமையாக வளர்த்து பேண இயல்கிறது? கபிலரின் தரப்பில் இருந்து இதற்கான பதில் என்பது - பிரபஞ்சத்தின் பிரக்ஞை நிலை ’புருஷன்’. இது பருவுலகை உணர்கிறது. இந்த புருஷ தத்துவத்தை ஏற்றே ஆகவேண்டும், ஏனெனில் பருப்பொருட்களின் கூட்டால் அமைக்கப்பட்ட எந்தவொன்றும், உதாரணத்திற்கு வீடு, ஒரு அறிவார்ந்த உயிரின் உபயோகத்திற்கு வடிவமைக்கப்பட்டதே. இதுபோல ஒழுங்குடன் அமைந்த பருப்பொருட்களின் உலகமும் அதன் மறுபக்கத்தில் பிரக்ஞை அல்லது பிரக்ஞைகள் இருப்பதை அனுமானிக்க வைக்கிறது. பிரக்ஞை இருப்பவற்றிற்கே இன்பம் துன்பம் எனும் அனுபவங்கள் உரியதாகுகிறது. மேலும் பொருள்வய உலகின் இயக்கம் மற்றும் அதன் சிக்கலில் இருந்து எளிமை மற்றும் தனிமையை நோக்கியவொரு நகர்வு உள்ளது, அது எவ்வளவு நுண்மையானது என்றாலும் அது உள்ளது. கபிலரின் தரப்பை பொருத்தவரை, பிரக்ஞை பல - எவ்வளவு உயிர்கள் உள்ளனவோ அவ்வளவு புருஷநிலைகள் உள்ளன. இவ்வாதத்திற்கு சான்றாக, எந்த இரு மனிதனின் அனுபவங்களும் ஒரே மாதிரி இல்லை எனும் உண்மையை முன்வைக்கின்றனர். பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம் யாவும் யாவருக்கும் ஒரே சமயத்தில் நிகழுவதில்லை. பிரகிருதி ஒவ்வொரு பிரக்ஞைக்கும் செயல்படுகிறது. எப்படி பிரக்ஞை இல்லாத தத்துவமான பிரகிருதி அதற்கு நேரெதிரான பிரக்ஞையுள்ள புருஷனுக்காக செயல்படுகிறது? இதற்கு கபிலரின் தரப்பு ’பருப்பொருளுக்கு நோக்கம் உண்டு’ என்ற கருத்தின் (teleology) அடிப்படையிலான பதிலை முன்வைக்கின்றனர். அதாவது, பிரகிருதி விழியிழந்தது என்றாலும் அது நோக்கமற்றது அல்ல. அது புருஷனின் சம்சார அனுபவங்கள் மற்றும் அறுதி வீடுபேறு ஆகிய இரண்டுக்கும் செயல்படுவது.
பிரபஞ்சத்தின் பரிணாமம் பிரகிருதியில் இருந்து மகத் உருவாவதில் துவங்குகிறது. மகத் அல்லது புத்தி என்பது உளம்சார்ந்த ஒரு தத்துவம். பிரகிருதியில் இருந்தே புத்தி வந்தது என்பதால் அதுவும் முக்குணங்களை கொண்டது. சத்வ - அறிவு மற்றும் பற்றற்ற அமைதி. ரஜஸ - இச்சை மற்றும் கோபம். தமஸ - நிலைத்தன்மை மற்றும் சோர்வு. ஒவ்வொரு புத்தியிலும் இந்த மூன்றில் ஓன்று ஓங்கியும் மற்ற இரண்டு தாழ்ந்தும் இருக்கும். புத்தியில் இருந்து அகங்காரம் அல்லது தன்னுணர்வு என்ற தத்துவம் உருவாகிறது. இது ஒவ்வொரு உயிருக்குமான தத்துவம். கபிலரின் தரப்பு இவ்வாறான தனி-உயிர்களுக்கான தத்துவத்திற்கு இணையாக பிரஞ்சமளாவிய தத்துவங்களையும் குறிப்பிடுகிறது - தனிஉயிர்-தத்துவம் மற்றும் பிரபஞ்ச-தத்துவம். இரண்டும் இணையாக பரிணாமம் அடைந்தன. உதாரணமாக பிரபஞ்ச மகத், பிரபஞ்ச அகங்காரம் என குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம்.
அகங்காரத்திற்கு மூன்று அம்சங்கள் உள்ளன - வைகாரிக அல்லது சத்வ தன்மை, தைசத அல்லது ரஜஸ தன்மை மற்றும் பூதாதி அல்லது தமஸ. வைகாரிகாவில் இருந்து மனம் அல்லது மனஸ், ஐந்து ஞான இந்திரியங்கள் (அறிபுலன்கள்) மற்றும் ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்) உருவாகின்றன. பூதாதியில் இருந்து ஐந்து தன்மாத்திரைகள் (நுண்ணறிதல்கள்) உருவாகின்றன. தைசத-த்தின் தூண்டுதலால் வைகாரிகாவும் பூதாதியும் செயல்நிலைக்கு செல்கின்றன. ஐந்து தன்மாத்திரைகளான ஓசை, தொடுகை, நிறம் (வடிவம்), சுவை, மணம் முறையே வானம், காற்று, தீ, நீர், நிலம் எனும் பஞ்சபூதங்களாக பரிணாமம் அடைகின்றன. இந்த பரிணாமத்தின் பல்வேறு படிநிலைகளை பேணுவது எதுவென்றால், குறைவடையாத பிரகிருதியில் இருந்து தடையில்லாது வரும் பருப்பொருளாகும், இதை பதஞ்சலி ’பிரகிருதியபுர’ (நிரப்புதல்) என குறிப்பிடுகிறார் (யோகபாஸ்யம், 4.2). ஆகவே புருஷன் மற்றும் இந்த 24 தத்துவங்களை (பிரகிருதி, மகத், அகங்காரம், மனஸ், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து பருப்பொருட்கள்) கொண்டுள்ள ஒரு தனி-உயிர் என்பது ஒரு நுண்ணலகு ஆகும். இந்த நுண்ணலகுகள் அனைத்தையும் ஒத்தது மற்றும் அனைத்திற்கும் பொதுவானது ஒரு பேரலகு ஆகும். எனினும் இங்கு அந்த ஒத்த தன்மைக்கு அதிக அழுத்தம் தரப்படவில்லை. ஏனென்றால் அப்படி தரப்பட்டிருந்தால் ஆன்மீகவாத பார்வை இங்கு தவிர்க்கமுடியாதது என ஆகியிருக்கும்.
புருஷன் ஒவ்வொரு உயிர்களிலும் இருப்பது அது ஒரு பிணைப்பில் உள்ளதை காட்டுகிறது. இந்த பிணைப்பு எதனால்? எவ்வாறு புருஷனும் பருப்பொருளும் இவ்வாறான ஒரு உறவில் உள்ளன? இதற்கு இரண்டு விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஒன்று வாகஸ்பதிமிஸ்ரரின் விளக்கம்: புருஷன் புத்தியின் சத்வ நிலையில் பிரதிபலிப்பதை பிணைப்பு என விளக்குகிறார். நீரலைகள் மேல் நிலவு பிரதிபலிப்பது போல, புத்தியின் ஓய்வற்ற அலைகளில் புருஷன் பிரதிபலிப்பது புருஷனுக்கு ஓர் பங்கேற்பு தன்மையை அளிக்கிறது. இதுவே பிணைப்பின் சாரம். இந்த விளக்கத்தை விக்ஞானபிக்ஷு ஒருதலைபட்சமானது மற்றும் வாழ்வின் உண்மையை விளக்க போதாதது என கருதி, மேலும் ஒரு பிரதிபலிப்பை முன்வைக்கிறார். அது புத்தியின் பிரதிபலிப்பு. இதன் மூலம் மட்டுமே புருஷனின் பிணைப்பு, துயரம், வலி போன்றவற்றை விளக்க இயலும் என்கிறார்.
பிணைப்பினாலேயே மூன்று துயரங்கள் (சாங்கியகாரிகை, 1) வருகின்றன. புருஷனுக்கும் பிரகிருதிக்குமான வேறுபாடு பற்றிய அறிவை அடைவதை தவிர அந்த துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு வேறு தீர்வு இல்லை. எனவே சாங்கியத்தின் ஆசிரியர் பஞ்சசிகா ‘ஏகமேவ தர்ஷனம், சாங்க்யமேவ தர்ஷனம்’ எனும் மேற்கோளை உலகிற்கு அளித்துள்ளார். பிரகிருதி-புருஷன்-அன்யதக்யதி வாயிலாக மட்டுமே, அதாவது பிரகிருதியையும் புருஷனை வேறுபடுத்தும் அறிவின் (சாங்கியகாரிகை, 37, பதஞ்சலி யோகசூத்திரம், 3.49) வாயிலாக மட்டுமே, ஆத்மாவின் ஊர்தியான நுண்-உடல் அல்லது லிங்கம் (சாங்கியகாரிகை, 40, 41) அதன் முதலில்லா வாழ்க்கை அலைகழிப்புகளில் இருந்து விடுபட்டு சுமையற்ற எப்போதைக்குமான விடுதலையை அடைய இயலும். தனது ராஜஸ மற்றும் தசஸ விசைகளால் புருஷனை பிணைத்திருக்கும் பிரகிருதியே தனது சத்வ குணத்தின் தூண்டுதலால் புருஷனை விடுவிக்கிறது (சாங்கியகாரிகை 63) என்பது ஆச்சரியமே. கபிலரின் தரப்பின் படி வீடுபேறு என்பது வாழ்க்கையின் முடிவுக்கு பின்னான நிலையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பிரகிருதியையும் புருஷனையும் வேறுபடுத்தும் நிலையில் புத்தி தன்னை நிறுவிக்கொண்டால் வாழும் உடலில் இருந்தே புருஷனின் விடுதலை சாத்தியம். இந்த அறிவு வளர்த்து நிலைபெறச் செய்யப்படுவது. இறுதியில் புருஷன் செயல், பண்புகள் மற்றும் செயல்படுத்தும் ஆற்றல் யாவும் கடந்த தூய புருஷநிலை (நஸ்மி, நமே, நஹம் - சாங்கியகாரிகை 64) அடைகிறது. பானை உருவான பின்னும் சுழலும் குயவனின் சக்கரம் போல, கடந்த கால செயல்களின் விசையால் ஜீவன்முக்தர் அதாவது வீடுபேறடைந்தவர் மேலும் சிறிது காலம் வாழ்ந்திருக்க இயலும். அந்த விசை தீரும் போது பருப்பொருட்களின் கூட்டான உடல் அதன் மூலமான பிரகிருதியில் கரைந்துவிடும். புருஷன் அதன் சுதந்திரமான, தனிமையான நித்திய நிலையில் தங்கியிருக்கும். இவ்வாறு விடுபட்ட புருஷனால் பிரகிருதியும் செயலற்று இருக்கும்.
தொல்சிந்தனைமுறை ஒன்றின் சுருக்கவடிவத்தையும் ஒரு கோட்டுச்சித்திரத்தையுமே மேலே பார்த்தோம். அது ’சத்காரியவாதம்’ என்ற வாதத்தை அடிப்படையாக கொண்டது. காரணத்தில் இல்லாதது காரியத்தில் இல்லை, காரியத்தில் அது வேறுவடிவில் இருக்கும் என்கிறது சத்காரியவாதம். குணங்கள் பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை. அது பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவலாக அறியப்படும் Dr.ஷெல்டனின்(W.H.Sheldon) புகழ்பெற்ற மனநிலைகளின் மூன்று பகுப்புகளான மூளை சார்ந்த நுண்ணுணர்வு (Cerebrotonic), உடல்வலிமை சார்ந்த செயல் (Somatotonic), சமூகம் சார்ந்த உணர்ச்சி (Viscerotonic) (Aldous Huxley, The Perennial Philosophy, pp. 171) என்பவற்றை முறையே சத்வ, ரஜஸ், தமோ குணங்களுடன் ஒப்பிடலாம். சாங்கியத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால் ஒன்றில் இருந்து எவ்வாறு மற்றொன்று வந்தது என்ற தீர்க்கமுடியாத சிக்கலான கேள்வி இங்கு வெற்றிகரமாக தவிர்க்கப்படுகிறது. இந்த சிக்கலை ஒருமைவாத சிந்தனைமுறைகள் எதிர்கொள்கின்றன. உதாரணத்திற்கு, சங்கரரின் அத்வைதம் எவ்வாறு தூய பிரக்ஞையான பிரம்மத்தில் இருந்து பருப்பொருள் உலகம் வந்தது என்பதை விளக்குவது அதில் இருக்கும் சிக்கலை காண்பிக்கிறது. எனினும் அது பருப்பொருள் உலகை மாயை என விளக்கிவிடுவதால் அந்த சிக்கல் கண்ணுக்குத்தெரியாமல் உள்ளது.
இதற்கு இணையாகவே பொருள்முதல்வாதத்தின் ஒருமைவாதியான மார்க்ஸ் பருப்பொருளில் இருந்து எவ்வாறு பிரக்ஞை வந்தது என்பதை விளக்கும் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதற்கு நேரெதிராக பல பிரக்ஞைகளுக்கும் பருப்பொருட்களுக்கும் இடையேயான நித்தியமான முரணியக்கத்தை கபிலரின் தரப்பு முன்வைக்கிறது. பருப்பொருளை முழுமையானது என்று முன்வைத்து, பருபொருளுக்கும் பிரக்ஞைக்கும் இடையில் பரிமாற்றம் நிகழும் ஒரு பாலம் இருப்பதை நிறுவ முயல்கிறது. சாங்கியம் முன்வைக்கும் உண்மையானது ’பிரக்ஞை மற்றும் பருப்பொருள் ஆகியவற்றிற்கு இடையே அடிப்படை வேறுபாடு’ உள்ளது என்பது. இந்த உண்மையே விவேகம் எனப்படுகிறது. ஆகவே இந்த பாதையில் வீடுபேறை நோக்கிச்செல்பவர்களுக்கு துறவு முன்னிறுத்தப்படுகிறது (பிரஹதாரண்யக உபநிஷதம், 3.5.1). இன்னொருபக்கம், பருப்பொருள் அடிப்படையில் குறைபட்டதோ அல்லது தீமையானதோ அல்ல என கபிலரின் பருப்பொருள் கொள்கை குறிப்பிடுகிறது. அது ‘சத்வ’ என குறையற்ற மற்றும் நன்மைகளின் சாத்தியத்தையும், ‘தமஸ்’ என குறையுள்ள மற்றும் தீமைகளின் சாத்தியத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது. சாங்கியத்தின் பருப்பொருள் கொள்கை மேலும் முக்கியமான ஒன்றை முன்வைக்கிறது: உலகம் எப்போதும் முழுச்சிதைவு எனும் புள்ளியை அடையாது. விடுதலை அடையாத புருஷனுடன் இணைந்து விரிதல் சுருங்குதல் எனும் முடிவிலா தாளத்தில் செல்கிறது. ஆகவே இது பிரபஞ்ச சுழற்சி அதாவது கல்பம் (விரிதல் சுருங்குதல், மீண்டும் விரிதல் என்ற தொடர் நிகழ்வு) என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளது எனலாம். இது இந்திய சிந்தனை எதுவாக இருந்தாலும் அது வைதீகமாக இருந்தாலும் அவைதீகமாக இருந்தாலும் அனைத்திலும் இந்த கருத்து உள்ளது.
சாங்கிய கருத்தான ’சம்சார வாழ்வில் இறந்த ஆத்மாக்கள் ஒரு வடிவிலிருந்து இன்னொரு சம்சார வடிவிற்கு மாற்றம் அடையும் இயங்குமுறை’யும் எல்லா இந்து நம்பிக்கைகளிலும் பெருவாரியாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் லிங்க-சரீரம் பிரகிருதியின் பதினெட்டு விரிவுகளில் இருந்து (புத்தி, அகங்காரம், மனஸ், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், ஐந்து தன்மாத்திரைகள்) வழியாக பரிணாமம் அடைவதை கற்பிக்கிறது. இந்த லிங்க-சரீரம் புருஷனுடன் அதன் பணியாளராக அதன் பணி முடியும் வரை பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. லிங்க-சரீரம் (நுண்-உடல்) கருப்பையில் இருந்து பிறந்த முழு-உடலில் இருந்து வேறுபட்டது. முழு-உடல் மரணத்தின் போது சிதைகிறது. ஆத்மா இன்னொரு வடிவத்திற்கு மாற்றம் அடையும் போதும் லிங்க-சரீரம் உடன் இருந்து அதற்கு ஊர்தியாக இருக்கும். இது மறுபிறப்பு கருத்திற்கான பொதுவானவொரு விளக்கத்தை அமைக்கிறது.
பருப்பொருள் காரணத்தில் இருந்து காரியம் பரிணாமம் அடைவது பற்றிய இந்த சித்திரம் தர்க்கரீதியானதாக தெரிந்தாலும் இதை நுணுகி ஆராயும் போது சிக்கல்கள் இருப்பது புலப்படுகிறது. முதல் காரணமான பிரகிருதியில் இருந்து எப்படி புத்தி, அகங்காரம் மற்றும் பிற தத்துவங்கள் வந்தன என்பதில் தர்க்கரீதியாகவே தெளிவில்லை. இந்த தத்துவங்கள் தொடர்ச்சியாகவும் இல்லை. உதாரணமாக, ’அத்யாவசிய’ (மனதில் உள்வாங்குதல், தீர்மானித்தல்) என்ற திறனை புத்தி கொண்டிருக்கவில்லை. அத்யாவசிய என்பது அகங்காரம் என அடுத்து வருபவற்றை குறிக்கிறது, அறிந்துகொள்ளக்கூடியவை உட்பட. ஆகவே புத்தி என்பது பிரபஞ்சம் சார்ந்த தத்துவத்தை குறிக்கவேண்டுமே தவிர தனி-உயிர் சார்ந்ததாக அல்ல. இந்த பிரபஞ்ச அளவில் புத்தியானது அறிவார்ந்தது, ஒளிரக்கூடியது, அகங்காரத்தினுள் இருக்கும் நுண்ணிய பகுதி, இது பிரகிருதியின் நிலையாக இருக்கும். இவ்வாறு பிரகிருதி உணரத்துவங்கிய பிறகு அகத்திற்கும் புறத்திற்கும், நான் என்பதற்கும் நீ என்பதற்குமான வேறுபாடு வளரும். ஆகவே பிரகிருதியில் இருந்து தொடங்கும் பரிணாம தொடரானது புலனுறுப்புகள், மனம், தன்னுணர்வு, அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் முறையே உணர்ச்சி முதல் முடிவெடுத்தல் வரையான உளம்சார் பரிணாமத்துடன் முரண்படுகிறது.
இதற்கு இணையாகவே, புருஷனுக்காகவே பிரகிருதி செயல்படுகிறது (சாங்கியகாரிகை, 60) என்ற கருத்தும் மறுக்கப்படுகிறது. இதற்கு சாங்கியம் கூறும் உவமைகளான பசுவின் பாலில் இருந்து கன்றுக்கு ஊட்டமளிப்பது போன்ற ஒழுக்கு, முடவனும் குருடனும் போல இணைந்து செயல்படுவது ஆகியவையும் தெளிவாகவே போதாமல் ஆகின்றன. உள்ளுணர்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவையே இந்த உவமைகளில் முன்வைக்கப்படுகின்றன என்பது தெளிவாக உள்ளது. பிரகிருதியை செயல்படுவதாக ஆக்கி, அதேசமயம் அதனுடைய செயலின் பலனை சுகிக்கும் திறனை பிரகிருதிக்கு மறுப்பது நியாயமற்றது. இது எள்ளலாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:
கார்த்துமேவ விஜநாதி பிரதானம் வியான்ஜனதிகம்
போக்தும் ந ஸ விஜநாதி கிமயக்தமதஹ பரம்
(தத்வசம்கரஹ, 300)
‘பிரகிருதி அருமையான உணவை சமைப்பதில் கைதேர்ந்தவள்; எனினும்